2017-06-10 15:40:00

மனதின், இதயத்தின், கைகளின் மொழிகளை அறிந்திடுவோம்


ஜூன்,10,2017. நாம் உணர்வதும், எண்ணுவதும், செயல்படுவதும் ஒன்றுக்கொன்று முரண்படாமல் இருக்கவேண்டுமெனில், மனதின், இதயத்தின் மற்றும் கைகளின் மொழிகள் நமக்குத் தெரிந்திருக்க வேண்டும் என அழைப்புவிடுத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

Scholas Occurrentes என்ற அமைப்பின் அங்கத்தினர்களை இவ்வெள்ளிக்கிழமை மாலை வத்திக்கானில் சந்தித்து உரை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், எவரையும் ஒதுக்கி வைக்காமல், அனைவரையும் வரவேற்று, அவர்களுக்குத் தேவையானவற்றை வழங்குபவர்களாக நாம் செயல்படவேண்டும் என கேட்டுக்கொண்டார்.

நமக்கென தனிப்பட்ட குழுக்களை மட்டும் தேர்ந்துகொண்டு, மற்றவர்களை ஒதுக்கி வாழும்போது, நம் மனதும், இதயமும், கைகளும் மூடிவிடுகின்றன என்ற திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், உலக மயமாக்கலில் எவ்வாறு, பன்மைத்தன்மையில் ஒன்றிப்பை எதிர்பார்க்கிறோமோ, அதேபோல், நட்பு வட்டாரத்திலும், ஒவ்வொருவரின் தனித்தன்மைகளையும் மதித்து, அங்கு ஒன்றிப்பை உருவாக்கவேண்டும் என அழைப்புவிடுத்தார்.

கருத்துக்களைப் பகிரும்போது, மற்றவர்களின் கருத்துக்கள் எப்போதும் மதிக்கப்பட வேண்டும் என்பதையும் வலியுறுத்தினார், திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.