2017-06-15 14:14:00

பாசமுள்ள பார்வையில்..எந்நிலையிலும் ஏற்கக் காத்திருக்கும்..


பக்தியும் பாசமும் நிறைந்த பெற்றோருக்குப் பிறந்தவர் அந்த இளம்பெண். தந்தையின் இறப்புக்குப் பின் அந்தக் கைம்பெண் தாய், தனது ஒரே மகளை மிகவும் பாசத்தோடு வளர்த்து வந்தார். ஆனால் அந்த இளம் பெண், கல்லூரியில் படிக்கும்போது, தகாத நண்பர்கள் பழக்கத்தினால் தீய வழியில் சென்றாள். வேறு வகையில் வாழ்வில் இன்பம் தேடினாள். அதனால் வாழ்வுப் பாதையில் வழுக்கி விழுந்தாள். தாய் எவ்வளவோ சொல்லியும், ஓர் ஆண் நண்பரோடு வீட்டை விட்டு வெளியேறினாள். காலம் உருண்டோடியது. பணம் இருக்கும்வரைதான் அவள் நம்பிச் சென்றவன் உடன் இருந்தான். இப்போது தனி மரமானாள் அந்தப் பெண். உதவி செய்ய யாருமில்லை. தானாகவே தன் வாழ்வை முடித்துக்கொள்வதைத் தவிர, வேறு வழி அவளுக்குத் தெரியவில்லை. இவ்வாறு மனம் கலங்கி, அழுதுகொண்டிருந்த வேளையில், அவளின் மனதில் ஓர் ஆசை பிறந்தது. கடைசியாக, தான் பிறந்து வளர்ந்த வீட்டுக்கு ஒருமுறை செல்ல முடிவெடுத்தாள். பகலில் சென்றால் ஊர் மக்கள் பாரத்துவிடுவார்கள் என்று வெட்கி, இரவில் செல்ல முடிவெடுத்தாள். நள்ளிரவில் தன் வீட்டுக்குச் சென்றாள் அவள். ஆச்சரியம். அந்நேரத்திலும் தன் வீட்டுக் கதவு திறந்தே கிடந்தது. மெதுவாக உள்ளே சென்று, அம்மா என்றாள் பயந்துகொண்டே. நள்ளிரவிலும் தூங்காமல் விழித்திருந்த தாயின் காலடிகளில், விம்மி அழுதபடியே விழுந்தாள். அம்மா, உங்கள் மன்னிப்புக்குக்கூட நான் தகுதியற்றவள் எனச் சொல்லி அழுதாள். எழுந்து மகளை அணைத்துக்கொண்ட அந்தத் தாய், மகளே, உன்னைப் பிரிந்த நாள் முதல், உனக்காக, இரவும் பகலும் செபித்து வருகிறேன். உன்னைப் பாதுகாப்பாக வீடு வந்து சேர்க்கும்படியாக, இறைவனிடம் எந்நேரமும் மன்றாடுகிறேன். நீ வீட்டைவிட்டுச் சென்ற அந்த நாள்முதல் இந்த வீட்டுக் கதவு பூட்டப்படவே இல்லை. நீ எந்நேரத்திலும் இங்கு வரலாம். இதில் சந்தேகமே வேண்டாம் என்றார் அந்தப் பாசக்காரத் தாய்.

பிரிந்து சென்ற பிள்ளைகளுக்காக வீட்டுக் கதவை மட்டுமல்ல, மனக்கதவையும் எப்போதும் திறந்தே வைத்திருப்பவர் தாய்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.