2017-06-16 15:53:00

அருள்பணியாளருக்குப் பாதுகாப்பு வழங்க அரசுக்கு விண்ணப்பம்


ஜூன்,16,2017. மேற்கு ஆப்ரிக்க நாடாகிய காமரூனில், இரு வாரங்களுக்கு முன், ஓர் ஆயர் கொடூரமாய்க் கொலைசெய்யப்பட்டுள்ளவேளை, மனித வாழ்வு பாதுகாக்கப்படுவதில், அரசு தனது கடமையை நிறைவேற்றுமாறு, அந்நாட்டு ஆயர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

காமரூன் நாட்டின் Bafia ஆயர் Jean Marie Benoît Bala அவர்கள், கடந்த மே 30ம் தேதி மாலையில் காணாமல்போனார். 58 வயது நிரம்பிய இந்த ஆயரின் வாகனம், சனாகா பாலத்துக்கருகில் கண்டுபிடிக்கப்பட்டது. மேலும், அவரின் சடலம், இந்தப் பாலத்திலிருந்து பத்து மைல் தூரத்தில், ஜூன் 2ம் தேதி கண்டுபிடிக்கப்பட்டது. பிரேதப் பரிசோதனை அறிக்கையில், ஆயர் Benoît Bala அவர்கள், நீரில் மூழ்கி இறக்கவில்லை, மாறாக, அவரது உடலில் சித்ரவதைக்கு உள்ளான அடையாளங்கள் உள்ளன எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையொட்டி அறிக்கை வெளியிட்டுள்ள காமரூன் ஆயர்கள், அந்நாட்டில் இதுவரை கொலைசெய்யப்பட்டுள்ள அருள்பணியாளர்கள் மற்றும், துறவிகள் குறித்து எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனவும், அருள்பணியாளர்கள், தீய சக்திகளால் துன்புறுத்தப்படுகின்றனர் எனவும் குறிப்பிட்டுள்ளனர். 

ஆதாரம் : Church Pop / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.