2017-06-16 16:59:00

கிறிஸ்துவின் திருஉடல், திருஇரத்தம் பெருவிழா - ஞாயிறு சிந்தனை


இயேசு சபையின் முன்னாள் தலைவர் அருள்பணி பேத்ரோ அருப்பே அவர்கள், முதல் உலகப்போர் நிகழ்ந்த காலத்தில், ஜப்பானின் ஹிரோஷிமா நகரில், இளம் துறவிகளின் பயிற்சியாளராக இருந்தார். 1945ம் ஆண்டு ஆகஸ்ட் 6ம் தேதி வீசப்பட்ட முதல் அணுகுண்டு, ஹிரோஷிமாவை அழித்தது. 80,000க்கும் அதிகமான உயிர்களைப் பலிகொண்ட அந்த கொடுமையின்போது, அந்நகரின் புறநகர் பகுதியில் இருந்த இயேசு சபை இளம் துறவியர் இல்லம், பெரும் சேதமின்றி தப்பித்தது. அந்த இல்லம் முழுவதும் ஒரு மருத்துவ மனையாக மாறியது. அங்கிருந்த சிறு கோவிலும், காயப்பட்டவர்களால் நிரம்பி வழிந்தது. அணுகுண்டு வீசப்பட்டதற்கு அடுத்த நாள், அந்தக் கோவிலில், அருள்பணி பேத்ரோ அருப்பே அவர்கள், திருப்பலி நிறைவேற்றினார். அத்திருப்பலி நேரத்தில் அவர் அடைந்த வேதனை அனுபவத்தை இவ்வாறு எழுதியுள்ளார்:

"நான் திருப்பலி நிகழ்த்தியபோது, அங்கு காயப்பட்டுக் கிடந்தவர்களைப் பார்த்து 'ஆண்டவர் உங்களோடு இருப்பாராக' என்று சொல்ல கைகளை விரித்தேன். ஆனால், அங்கு நான் கண்ட காட்சி என்னை உறைய வைத்தது. எனக்கு முன் காயப்பட்டுக் கிடந்த அந்த மனுக்குலத்தை, அவர்களை அந்த நிலைக்கு உள்ளாக்கிய மனிதர்களின் அழிவுச்சிந்தனைகளை எண்ணியபோது, என் விரிந்த கைகள் அப்படியே நின்றுவிட்டன. அங்கு படுத்திருந்தவர்கள் என்னைப் பார்த்த அந்தப் பார்வை என் உள்ளத்தைத் துளைத்தது. எங்கிருந்தாகிலும் தங்களுக்கு ஆறுதல் வருமா, முக்கியமாக, இந்தப் பீடத்திலிருந்து ஆறுதல் வருமா என்ற ஏக்கத்தை அவர்கள் பார்வையில் நான் படித்தேன். என் வாழ்வில் மறக்கமுடியாத திருப்பலி அது" என்று அருள்பணி பேத்ரோ அருப்பே அவர்கள், தன் நினைவுகளைப் பதிவு செய்துள்ளார். காயப்பட்ட மனுக்குலத்திற்கு முன் காயப்பட்டக் கடவுளைக் காட்டும் ஒரு திருவிழாவை இன்று நாம் கொண்டாடுகிறோம். இன்று இயேசுவின் திரு உடல் திரு இரத்தம் திருவிழா.

நம்மில் பலர், சிறுவயதில் புது நன்மை வாங்கியிருப்போம். அந்த நாளுக்கென நம்மைத் தயாரிக்க, பங்குதந்தையர் அல்லது அருள்சகோதரிகள் நமக்கு மறைகல்விப் பாடங்கள் சொல்லித் தந்திருப்பர். அப்ப இரச வடிவில் இயேசு பிரசன்னமாகி இருக்கும் இந்தப் பெரும் மறையுண்மையைப் பற்றி கதைகள் பல சொல்லியிருப்பர். இந்தக் கதைகள், இன்னும் நம் நினைவுகளில் தங்கியிருந்தால், அவை, இன்னும் நம் வாழ்வில், தாக்கங்களை உருவாக்கி வந்தால், நாம் பேறு பெற்றவர்கள்.

குழந்தைகளாய் நாம் இருந்தபோது கற்றுக்கொண்ட பல பாடங்கள், இன்னும் நம் வாழ்வில், பாதிப்புக்களை உருவாக்கி வருகின்றன. வயதில் நாம் வளர்ந்த பின், சிந்திப்பதிலும் பல மாற்றங்களை உணர்ந்திருக்கிறோம். இந்த மாற்றங்கள், நமது குழந்தைப் பருவச் சிந்தனைகளைவிட சிறந்தவை என்று எப்போதும் சொல்லிவிட முடியாது. பல வேளைகளில், நாம் குழம்பிப்போயிருக்கும்போது, குழந்தைகளைப் போல் எளிதான முறையில் சிந்திக்க முடியவில்லையே என்று ஏங்கியிருக்கிறோம். பல நேரங்களில் வயதில் வளர்ந்தவர்களுக்கு, குழந்தைகள் பாடங்கள் சொல்லித் தருகின்றனர். சென்ற வாரம் மூவொரு இறைவனைப் பற்றி புனித அகஸ்டினுக்கு கடற்கரையில் ஒரு சிறுவன் சொல்லித்தந்த பாடத்தைப்பற்றி சிந்தித்தோம். இன்று நாம் கொண்டாடும் ஆண்டவரின் திரு உடல், திரு இரத்தம் திருவிழாவுக்குத் தேவையான பாடத்தை, மற்றொரு குழந்தையின் வழியே பயில முயல்வோம். நாம் சந்திக்கப் போகும் குழந்தை, அன்பு மருத்துவர் (Doctor Love) என்று புகழ்பெற்ற பேராசிரியர் லியோ புஸ்காலியா (Leo Buscaglia) என்பவரால் தேர்ந்தெடுக்கப்பட்டு, பரிசு பெற்ற ஒரு குழந்தை.

அதிக அன்பு காட்டிய குழந்தை யார் என்று தீர்மானிக்க, ஒருமுறை பேராசிரியர் லியோ அவர்களை நடுவராக நியமித்தனர். பல குழந்தைகள் இந்தப் போட்டிக்கெனத் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அவர்கள் செய்த மிக அன்பு நிறைந்த செயல்கள் பேராசிரியர் லியோ அவர்களிடம் விவரிக்கப்பட்டன. அக்குழந்தைகளில், ஒரு 4 வயது சிறுவன், மிக அன்பு காட்டிய சிறுவன் என்று, பேராசிரியர் லியோ அவர்கள் தேர்ந்தெடுத்தார். அந்தச் சிறுவன் என்ன செய்தான்?

அச்சிறுவனின் வீட்டுக்கு அடுத்த வீட்டில் ஒரு முதியவர் வாழ்ந்து வந்தார். அவர் தன் மனைவியை அண்மையில் இழந்தவர். ஒரு நாள் மாலை அவர் தன் வீட்டுக்கு முன்புறத்தில் ஒரு சாய்வு நாற்காலியில் அமர்ந்திருந்தார். அவர் கண்களில் கண்ணீர் வழிந்தோடியது. அதைப் பார்த்த அச்சிறுவன், அந்த முதியவர் அருகே சென்று, அவர் மடியில் ஏறி அமர்ந்தான். இருவரும் ஒன்றும் பேசவில்லை. நீண்டநேரம் சென்று, சிறுவன் மீண்டும் தன் வீட்டுக்குத் திரும்பினான். அவன் செய்ததையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த அவன் அம்மா, அவனிடம், "நீ தாத்தா மடியில உக்காந்திருந்தியே, அவர்கிட்ட என்ன சொன்ன?" என்று கேட்டார். சிறுவன் அம்மாவிடம், "ஒன்னும் சொல்லல. அவர் நல்லா அழட்டும்னு அவர் மடியில உக்கார்ந்திருந்தேன்" என்று சொன்னான்.

அச்சிறுவனின் செயலைப் பாராட்டிய பேராசிரியர் லியோ அவர்கள், அதிக அன்பு காட்டிய குழந்தை என்ற பரிசை அச்சிறுவனுக்கு வழங்கினார். எவ்விதத் தயக்கமும் இல்லாமல், அந்த முதியவரின் மடியில் உரிமையோடு ஏறி அமர்ந்திருந்த நான்கு வயது சிறுவன், இயேசுவின் திரு உடல், திரு இரத்தம் திருவிழாவின் உட்பொருளை நமக்கு சொல்லித் தருகிறான்.

அன்பை, ஆயிரம் வழிகளில் நாம் உணர்த்தலாம். அந்த வழிகளிலேயே மிகவும் சிறந்தது, நாம் அன்பு கொண்டவருடன் தங்கி இருப்பது. பரிசுகள் தருவது, வார்த்தைகளில் சொல்வது, செயல்களில் காட்டுவது என்று பல வடிவங்களில் அன்பு வெளிப்பட்டாலும், பிறருடன், பிறருக்காக முழுமையாகப் பிரசன்னமாகி இருப்பதே அன்பு. இந்த முழுமையான பிரசன்னம், வாழ்நாளின் ஒவ்வொரு நொடியும் தொடர முடிந்தால், அது அன்பின் உச்சம்.

எப்படி நம் இறைவன் மூவொரு இறைவனாய் இருக்கிறார் என்ற கேள்வியை விட, அவர் ஏன் மூவொரு இறைவனாய் இருக்கிறார் என்ற கேள்விக்கு விடை தேடுவது நமக்கு நல்லது என்று, சென்ற வாரம் சிந்தித்தோம். அதேபோல், எப்படி, அப்ப இரச வடிவில் இயேசு பிரசன்னமாகி இருக்கிறார் என்ற கேள்விக்கு இறையியல் விளக்கங்கள் தேடுவதற்குப் பதில், இயேசு, ஏன் அப்ப இரச வடிவில் நம்முடன் தங்கவிழைந்தார் என்பதை உணர்ந்துகொள்வது நமக்குப் பயனளிக்கும்.

ஏன் இறைமகன் அப்ப இரச வடிவில் தன் பிரசன்னத்தை இந்த உலகில் விட்டுச் சென்றார்? அப்பமும், இரசமும், இஸ்ரயேல் மக்கள் தினமும் உண்ட, எளிய உணவுப் பொருட்கள். எந்த ஓர் உணவையும் நாம் உண்டபின், அது, நம் உடலோடு கலந்து ஒன்றாகிவிடும். நம் இரத்தமாக, தசையாக, எலும்பாக, நரம்பாக மாறிவிடும். உணவுக்குள்ள இந்த அடிப்படை குணங்களெல்லாம் இறைவனுக்கும் உண்டு என்பதை நிலைநாட்ட, இயேசு இந்த வடிவைத் தேர்ந்தெடுத்தார் என்று புரிந்துகொள்கிறோம். எளிய வடிவங்கள், அவருக்குப் பிடித்த வடிவங்கள். எளிய உணவில், நாம் தினமும் உண்ணும் உணவில், நம் உடலாகவே மாறி, நம்மை வாழவைக்கும் உணவில், இறைவன் நம்முடன் வாழ்கிறார் என்பது, நமக்கெல்லாம் தரப்பட்டுள்ள அற்புதமான கொடை. இணைபிரியாமல், எப்போதும் மனித குலத்துடன் தங்கியிருப்பதற்கு இயேசு இந்த வழியைத் தெரிவு செய்தார்.

தங்களுடன், தங்களுக்குள், இறைமகன் இயேசு தங்கியிருக்கிறார் என்ற அந்த உணர்வால், எத்தனையோ உன்னத உள்ளங்கள், தங்கள் வாழ்வை அவருக்காக அர்ப்பணித்தனர். அத்தகைய ஓர் உன்னத உள்ளத்தின் வாழ்விலிருந்து ஒரு நிகழ்வு இதோ:

17ம் நூற்றாண்டில், கானடாவில், பழங்குடியினரிடையே பணிபுரிந்து, அவர்கள் மத்தியில் மறைசாட்சியாக உயிர்துறந்த பல இயேசு சபை அருள்பணியாளர்களில், புனித ஐசக் ஜோக்ஸ் (Isaac Jogues) அவர்களும் ஒருவர். அந்த மக்களால் சித்ரவதைகள் செய்யப்பட்டு, அவர் தன் இரு கரங்களிலும், கட்டைவிரல் மற்றும் ஆள்காட்டி விரல்களை இழந்திருந்தார். இந்நிலையில் அவர் ஐரோப்பாவிற்குத் திரும்பியபோது, அங்கு திருப்பலி நிகழ்த்த விரும்பினார். அக்காலத்திய மரபின்படி, இயேசுவின் திரு உடலை, கட்டைவிரல் மற்றும் ஆள்காட்டி விரல்களால் மட்டுமே தொடமுடியும் என்று, திருஅவையின் திருவழிபாட்டு சட்டங்கள் இருந்ததால், அவ்விரல்களை இழந்திருந்த அருள்பணி ஐசக் அவர்கள், திருப்பலி நிறைவேற்ற, திருத்தந்தையிடமிருந்து சிறப்பு உத்தரவு பெறவேண்டியிருந்தது. அப்போது திருத்தந்தையாக இருந்த 8ம் Urban அவர்களிடம் உத்தரவு கேட்டபோது, அவர், "இயேசுவின் சிறந்ததொரு சாட்சியாக வாழும் இந்த அருள்பணியாளர், திருப்பலி நிகழ்த்த யாரும் தடை செய்யமுடியுமா?" என்று சொல்லி, அவருக்கு உத்தரவு அளித்தார். விரல்கள் இல்லாதபோதும், திருப்பலி நிகழ்த்தி, அப்பத்தையும், கிண்ணத்தையும், விரல்கள் குறைந்த தன் கரங்களில் அருள்பணி ஐசக் அவர்கள் உயர்த்திப் பிடித்தது, கட்டாயம் பலருக்கு இறை பிரசன்னத்தின் வலிமையை உணர்த்தியிருக்கும்.

தன் உடலின் ஒவ்வொரு அணுவையும் மக்களுக்கென வழங்கிய இயேசுவின் திரு உடல், திரு இரத்தம் திருநாளன்று, நாமும், மக்களின் நல்வாழ்வுக்கு, ஏதோ ஒரு வகையில், நம்மையே வழங்கும் வழிகளை, இறைமகன் நமக்குச் சொல்லித்தர வேண்டுமென்று மன்றாடுவோம்.

இறுதியாக, இரு எண்ணங்கள், வேண்டுதல்கள்... ஜூன் 18, இஞ்ஞாயிறன்று, தந்தை தினத்தைக் கொண்டாடுகிறோம். மே மாதம் இரண்டாம் ஞாயிறை அன்னை தினமாகவும், ஜூன் மாதம் மூன்றாம் ஞாயிறை தந்தை தினமாகவும் நாம் கொண்டாடுகிறோம். மேலும், ஜூன் 20, இச்செவ்வாயன்று, புலம்பெயர்ந்தோர் உலக நாளைக் கடைபிடிக்கிறோம். இந்த உலகநாளையொட்டி, ஐ.நா. பொதுச்செயலர், அந்தோனியோ கூட்டேரஸ் அவர்கள் விடுத்துள்ள விண்ணப்பம் இதோ...

"புலம்பெயர்ந்தோர் பலரை நான் சந்தித்துள்ளேன். வாழ்வில் பெரும்பாலானவற்றை இழந்திருந்தாலும், தங்கள் குழந்தைகளுக்காக வளர்த்துக்கொண்ட கனவுகளையோ, நல்லதொரு உலகை உருவாக்க முடியும் என்ற ஆவலையோ அவர்கள் இழக்கவில்லை. அவர்கள் நம்மிடம் கேட்பது, மிகச் சிறியதே – அவர்கள் அனுபவிக்கும் மிகக் கடினமானத் துன்ப நேரங்களில், நமது ஆதரவை மட்டுமே அவர்கள் கேட்கின்றனர்."

புலம் பெயர்ந்தோர் நாளையும், அன்னைதினம், அல்லது, தந்தை தினம் இவற்றையும் இணைத்துச் சிந்திக்கும்போது, நமது அன்னையரும் தந்தையரும் நம் குடும்பங்களிலேயே புலம்பெயர்ந்தோராய் மாறிவரும் துயரத்தையும் சிந்திக்கவேண்டும். புலம்பெயர்ந்தோர் தங்கள் நாட்டைவிட்டு, அல்லது, உள்நாட்டுக்குள்ளேயே ஆதரவு ஏதுமின்றி அலைகழிக்கப்படுகின்றனர். அன்னையரும், தந்தையரும் வீட்டுக்குள்ளேயே உறவுகள் அறுக்கப்பட்டு, அல்லது, முதியோர் இல்லங்களுக்கு அனுப்பப்பட்டு, புலம்பெயர்ந்தோராய் வாழ்கின்றனர்.

1907ம் ஆண்டு அமெரிக்காவின் மேற்கு வெர்ஜீனியாவில் Monongah என்ற இடத்தில் நிலக்கரிச் சுரங்கம் ஒன்றில் ஏற்பட்ட விபத்தில் 362 தொழிலாளிகள் இறந்தனர். இதனால், பல நூறு குடும்பங்கள் தந்தையை இழந்து தவித்தன. இந்த நாளை நினைவுகூரும் விதமாக, 1908ம் ஆண்டு முதல் தந்தை தினம் அறிவிக்கப்பட்டது.

கடந்த நூறு ஆண்டுகளுக்கும் மேலாக, தாய்க்கு ஒரு தினம், தந்தைக்கு ஒரு தினம் என்று நாம் கொண்டாடி வருகிறோம். இந்தக் கொண்டாட்டங்கள் வருடத்தின் இரு நாள்களோடு முடிந்துவிடுவது நியாயமா? அன்னை தினம், தந்தை தினம் இரண்டும், மலர்களாலும், வாழ்த்து அட்டைகளாலும் நிறைந்து போன வியாபாரத் திருநாள்களாக மாறிவிட்டன. வயது முதிர்ந்த காலத்தில், தாயையும், தந்தையையும் முதியோர் இல்லங்களில் சேர்த்துவிட்டு, இந்த நாளில் மட்டும் அவர்களைச் சென்று பார்த்து மலர்களையும், மற்ற பரிசுகளையும் தருவதால் நமது கடமைகள் முடிந்துவிடுகின்றனவா?

ஆண்டின் இரு நாள்களில் மட்டுமல்ல. ஆண்டின் ஒவ்வொரு நாளும் அவர்கள் நினைவுகூரப்பட வேண்டியவர்கள். அவர்கள் இவ்வுலகில் வாழும் எஞ்சிய நாட்கள் அனைத்தும், அவர்கள் நினைவுகூரப்பட வேண்டியவர்கள். போற்றிக் கொண்டாடப்பட வேண்டியவர்கள்.

உலகில் வீசும் வன்முறைப் புயல்களால் புலம்பெயர்ந்துள்ள குடும்பங்களுக்காக, அதிலும் குறிப்பாக, தாய், தந்தை என்ற ஆணிவேர்கள் அகற்றப்பட்டு, காய்ந்த சருகுகள் போல புயலில் சிக்கித் தவிக்கும் பல்லாயிரம் குழந்தைகளுக்காக இன்று இறைவனிடம் உருக்கமான வேண்டுதல்களை எழுப்புவோம்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.