2017-06-22 14:55:00

பாசமுள்ள பார்வையில்..பெற்றால் மட்டுமா பிள்ளை தாய்க்கு


ஏக்நாத் என்ற இறையடியார் எப்படிப்பட்ட உணர்வுகளையும் கட்டுப்படுத்தக் கூடியவர். எதற்காகவும் அவர் தனது நிலையிலிருந்து தாழமாட்டார். அவரது மனைவியும், கணவருக்கு ஏற்ற துணைவியாக இருந்தார். ஒருநாள் ஒருவன், தீய எண்ணத்துடன் ஏக்நாத் அவர்களிடம் வந்து, அவரை, தகாத சொற்களால், மனம் திருப்தியடையும்வரை திட்டி தீர்த்தான். ஆனால், ஏக்நாத் தம்பதியர் ஒரு குழப்பமும் இன்றி அமைதியுடன் கேட்டுக்கொண்டிருந்தனர். வந்தவன் சோர்வடைந்துவிட்டான். அப்போது ஏக்நாத் அவனிடம், நண்பனே, சாப்பாட்டுக்கு நேரம் ஆகிவிட்டது. நீண்ட நேர வழிபாட்டிற்குப் பிறகு உனக்குப் பசி எடுத்திருக்கும், களைப்பாயும் இருக்கிறாய் என்றார். பின், ஏக்நாத் அவர்கள், தன் துணைவியாரிடம், அவனுக்கு உணவு பரிமாறச் சொன்னார். அந்த அம்மையார் குனிந்து உணவைப் பரிமாறிக்கொண்டிருக்கையில், வந்தவன் பின்னால் வந்து, அம்மையாரின் முதுகில் ஏறி அமர்ந்தான். ‘நிமிர்ந்து விடாதே, பையன் விழுந்து விடுவான்’ என்றார், ஏக்நாத், தன் துணைவியாரிடம். ‘உண்மைதான். நமது மகனும், சிறுவனாய் இருந்தபோது இவ்வாறுதானே விளையாடினான்’ என்றார், துணைவியார். இந்தத் தெய்வீக உரையாடலைக் கேட்டு, வந்தவன் திடுக்கிட்டான். அவர்களது காலடிகளில் விழுந்து வணங்கி, கண்ணீரால் மன்னிப்புக் கேட்டான். அப்போது அந்த அம்மையார், இதில், மன்னிப்பதற்கு என்ன இருக்கிறது? குழந்தைகள் எப்போதும் இப்படித்தான் நடந்துகொள்வார்கள், நீ எங்கள் பிள்ளையல்லவா? என்றார்.

ஊரார் பிள்ளையும் தன் பிள்ளையே தாய்க்கு. பெற்றால் மட்டுமல்ல பிள்ளை, தாய்க்கு,!

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.