2017-06-24 15:25:00

போலியான செய்திகளைப் பகிர்ந்துகொள்வதை நிறுத்துங்கள்


ஜூன்,24,2017. போலியான செய்திகளைப் பகிர்ந்துகொள்வதை நிறுத்துங்கள் என, பிலிப்பின்ஸ் நாட்டு கத்தோலிக்க ஆயர்கள், விசுவாசிகளைக் கேட்டுக் கொண்டுள்ளனர்.

போலியான செய்திகள் பரப்பப்படுவது உலகெங்கும் ஒரு பிரச்சனையாகவுள்ளவேளை, பிலிப்பின்ஸ் மக்கள், இத்தகைய செய்திகளைப் பரப்புவதை நிறுத்த வேண்டுமெனவும், உண்மை என்பது என்ன எனவும், மேய்ப்புப்பணி அறிக்கையில் விளக்கியுள்ளனர், ஆயர்கள்.

இயேசுவில் பேருண்மையைக் கண்டறியத் தவறிய பிலாத்து, இயேசுவிடம், உண்மையா? அது என்ன? (யோவா.18,38) எனக் கேட்ட கேள்வியைக் குறிப்பிட்டுள்ள ஆயர்கள், கிறிஸ்தவர்கள், எல்லாவற்றிலும் உண்மையை ஏற்க அழைக்கப்பட்டுள்ளனர் என்று தெரிவித்துள்ளனர்.

உண்மையைத் திரித்துக்கூறும் செய்திகளுக்கு ஆதரவளிப்பது, அவற்றைப் பரப்புவது   மற்றும், அச்செய்திகளுக்கு ஊக்கம் கொடுப்பதை, கத்தோலிக்கர் விலக்கி நடக்குமாறும், இத்தகைய செய்திகள் பரப்பப்படுவதற்கு எதிர்ப்புத் தெரிவிக்குமாறும், கேட்டுக் கொண்டுள்ளனர் பிலிப்பின்ஸ் ஆயர்கள்.

ஆதாரம் : UCAN /வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.