2017-06-30 14:45:00

பாசமுள்ள பார்வையில்...: பிள்ளையே ஒரு தாயின் சொர்க்கம்


தன் சொந்த நாட்டிற்குள்ளேயே அகதியாகி, தன் ஏழு வயது மகனை அழைத்துக் கொண்டு பாலைவனம் வழியாக அடுத்த நாட்டிற்கு நடந்து கொண்டிருந்தார் அத்தாய். ஜந்து மணி நேரம் தொடர்ந்து நடந்த அந்த தாய்க்கும், மகனுக்கும், களைப்பு ஏற்பட்டது. அதைவிட மேலாக, தாகமெடுத்தது. பாலவனத்தில் எங்கிருந்து தண்ணீர் கிடைக்கும்? அதிசயமாக, சிறிது தூரத்தில் ஒரு மாளிகையும், அதைச் சுற்றி தோட்டமும் தெரிந்தன. வேக, வேகமாக அதனருகே சென்ற தாயின் கண்களில் 'வயது வந்தவர்களுக்கு மட்டுமே அனுமதி' என்ற பலகை தெரிந்தது. வாசலை இலேசாகத் திறந்து, அங்கிருந்த காவலாளியிடம் கேட்டார், 'ஐயா, எனக்கும், என் மகனுக்கும், சிறிது தண்ணீர் கிடைக்குமா? என்று. ‘நீங்கள் உள்ளே வந்து எவ்வளவு வேண்டுமானாலும் குடிக்கலாம். ஆனால் உங்கள் மகனுக்கு உள்ளே அனுமதியில்லை’என்றார் அந்தக் காவலாளி. 'நான் குடித்துவிட்டு என் மகனுக்கு கொஞ்சம் தண்ணீரை வெளியே எடுத்துவரலாமா?' என அத்தாய் கேட்டதற்கு, ‘உள்ளிருந்து எதையும் வெளியே எடுத்துச் செல்ல அனுமதியில்லை’என்று சொல்லிவிட்டார் காவலாளி. ‘இந்த இடத்தின் பெயர் என்ன?’ என அத்தாய் கேட்டபோது, 'சொர்க்கம்' என பதிலளித்தார், அந்தக் காவலாளி. ‘இது சொர்க்கமாகவே இருந்தாலும், என் மகனுக்கு கிடைக்காத தண்ணீர் எனக்கும் வேண்டாம், என் மகனுடன் நானும் தாகத்தால் சாகிறேன்' எனக் கூறிவிட்டு முன்னோக்கி நடந்தார், அத்தாய். இரண்டே நிமிடத்தில், சிறிது பள்ளத்தில் ஒரு பெரிய வீட்டைப் பார்த்து, தோட்டக் கதவைத் திறந்துகொண்டு உள்ளேச் சென்றார். அங்கிருந்த முதியவர் சொன்னார், 'தாகமாக வந்திருக்கிறீர்களா?, நீங்களும், உங்கள் மகனும், நீர் அருந்திவிட்டு, சிறிது இளைப்பாறுங்கள், அதற்குள் நான் ஏதாவது சாப்பாடு தயார் செய்கிறேன்', என்று. மகிழ்ச்சியடைந்த தாய் கேட்டார், ‘ஐயா இந்த இடத்தின் பெயர் என்ன' என்று. அவர் சொன்னார், ‘இதன் பெயர் சொர்க்கம்' என்று. அந்த தாய் கூறினார், 'ஐயா, இதற்கு முந்தைய கட்டடத்தையும் 'சொர்க்கம்' என்றுதானே கூறினார்கள்’ என்று. 'இல்லையம்மா. அதன் பெயர் நரகம். அடுத்தவர் மீது வைத்திருக்கும் அன்பை பரிசோதிக்க வைக்கப்படிருக்கும் இடம் அது. நீங்கள் உங்கள் மகனை விட்டுவிட்டு, தனியே தண்ணீர் அருந்தியிருந்தால், அந்த வீட்டிலேயே அடைபட வேண்டியிருந்திருக்கும். பிள்ளை மீது நீங்கள் கொண்டிருந்த பாசம்தான் உங்களை இந்த உண்மையான சொர்க்கத்திற்கு கொண்டு வந்துள்ளது' என்று கூறி முடித்தார், முதியவர்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.