2017-07-05 15:57:00

ஆசிய பெண்கள், நற்செய்தியின் மதிப்பீடுகளுக்கு சான்றுகள்


ஜூலை,05,2017. ஆசியாவின் பல நாடுகளில் சவால்களும், பிரச்சனைகளும் கூடிவந்தாலும், அந்நாடுகளில் வாழும், கிறிஸ்தவ பெண்களும், குடும்பத்தினரும், நற்செய்தியின் மதிப்பீடுகளுக்கு தலைசிறந்த சான்றுகளாக வாழ்கின்றனர் என்று ஆசிய கர்தினால் ஒருவர் கூறியுள்ளார்.

ஆசியா ஆயர் பேரவைகளின் ஒருங்கிணைப்பு குழுவின் பொதுநிலையினர் மற்றும் குடும்பம் பணிக்குழுவின் தலைவரும், டாக்கா பேராயருமான கர்தினால் பேட்ரிக் டி'ரொசாரியோ அவர்கள், பீதேஸ் (Fides) செய்திக்கு அளித்த பேட்டியொன்றில் இவ்வாறு கூறியுள்ளார்.

ஆசிய நாடுகளான பங்களாதேஷ், கம்போடியா, இந்தியா, மலேசியா, ஆகிய நாடுகளில், பெண்கள், ஒவ்வொரு நாள் வாழ்விலும், பல்வேறு ஆபத்துக்களைச் சந்தித்தாலும், விவிலிய விழுமியங்களுக்கு வீரமிகுந்த சாட்சிகளாக வாழ்கின்றனர் என்று கர்தினால் ரொசாரியோ அவர்கள் எடுத்துரைத்தார்.

இவ்வாண்டு ஆகஸ்ட் மாதம் இந்தோனேசியாவின் யோக்யகார்த்தா (Yogyakarta) எனுமிடத்தில் நடைபெறவிருக்கும் ஆசிய இளையோர் நாள் நிகழ்வைக் குறித்துப் பேசிய கர்தினால் டி'ரொசாரியோ அவர்கள், இந்தக் கூட்டம், 2018ம் ஆண்டு நடைபெறும் உலக ஆயர் மாமன்றத்திற்கு தகுந்ததொரு தயாரிப்பாக இருக்கும் என்று கூறினார்.

ஆதாரம் : Fides / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.