2017-07-05 16:05:00

கிறிஸ்தவ-இஸ்லாமிய மோதல்கள் என்பது, தவறான செய்தி


ஜூலை,05,2017. பிலிப்பீன்ஸ் நாட்டில் நிகழ்ந்துவரும் மோதல்களை கிறிஸ்தவருக்கும், இஸ்லாமியருக்கும் இடையே நிகழும் மோதலாக வதந்திகளைப் பரப்புவோரின் நோக்கம் தோல்வியடையும் என்று, மணிலா பேராயர், கர்தினால் லூயிஸ் அந்தோனியோ தாக்லே அவர்கள் கூறியுள்ளார்.

இம்மாத இறுதியில் நடைபெறவிருக்கும் பிலிப்பீன்ஸ் ஆயர்களின் ஆண்டு கூட்டம் குறித்து, இச்செவ்வாயன்று செய்தியாளர்களிடம் பேசிய கர்தினால் தாக்லே அவர்கள், இஸ்லாமிய அரசு என்று சொல்லிக்கொள்ளும் தீவிரவாதிகள், இந்நாட்டில் நிகழும் மோதல்களை கிறிஸ்தவ-இஸ்லாமிய மோதல்கள் என்று தவறான செய்திகளைப் பரப்பி வரும் முயற்சிகள் தோல்வியடையும் என்று கூறினார்.

மே மாதம் 23ம் தேதி மராவி என்ற நகரில் நடைபெற்ற தீவிரவாத தாக்குதல்களை அடுத்து, கிறிஸ்தவர்களும், இஸ்லாமியரும் ஒருவருக்கொருவர் உதவியாக இருக்கும் பல செய்திகள் நம்பிக்கை தருகின்றன என்பதை கர்தினால் தாக்லே அவர்கள் எடுத்துரைத்தார்.

இஸ்லாமிய அரசு என்று தங்களையே கூறிவரும் தீவிரவாதக் குழுவின் கட்டுப்பாட்டில் ஓர் அருள்பணியாளரும், ஏறத்தாழ 100 கிறிஸ்தவர்களும் பிணைக்கைதிகளாக உள்ளனர் என்றும், பிலிப்பீன்ஸ் நாட்டின் தெற்கு பகுதியில் அரசு அறிவித்துள்ள நெருக்கடி நிலையை, ஜூலை 4ம் தேதி, பிலிப்பீன்ஸ் உச்ச நீதி மன்றம் உறுதி செய்தது என்றும் UCAN செய்தி கூறுகிறது.

ஆதாரம் : UCAN / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.