2017-07-05 15:54:00

பாசமுள்ள பார்வையில்... பெரியது, தாய்ப் பாசமா? தந்தைப் பாசமா?


பத்து வயதிலேயே தாயையும் தந்தையையும் இழந்துவிட்டு, அன்றிலிருந்து ஒரு சிறார் காப்பகத்திலேயே படித்து வளர்ந்தவர் நாகராசன். இப்போது நல்லபடியாக வேலையில் அமர்ந்து திருமணமும் முடிந்து, ஒரு குழந்தையும் இருக்கிறது அவருக்கு. தன் எட்டு வயது மகனை அவ்வளவு செல்லமாக வளர்த்தார் அவர். தனக்கு இளவயதில் கிட்டாத பெற்றோர் பாசத்தையெல்லாம் தன் மகனுக்கு அளவுக்கதிகமாகவே கொடுத்தார். அலுவலகத்திற்கு போய்விட்டு வந்தபின், ஒவ்வொரு மணித்துளியையும் அவனுக்காகவே செலவிட்டார். அவர் மனைவி அலுவலகத்திலிருந்து எப்போதும் மாலை ஏழு மணிக்குத்தான் வருவார். ஆகவே பெரும்பாலான நேரங்களில், மாலை சிற்றுண்டியை இவரே மகனுக்குத் தயாரித்து தந்துவிட்டு, இரவு உணவைத் தயாரிக்க ஆரம்பித்து விடுவார். தன் மனைவி மீது அவர் கொண்டிருக்கும் பாசமும், மகன் மீது கொண்டிருக்கும் பாசமும் அந்த உணவு தயாரிப்பில் தெரியும். அவர் மனைவியும் குழந்தை மீது மிகவும் பாசமாகத்தான் நடந்து கொள்வார். ஆனால், அவர் மனைவி வேலை செய்யும் அலுவலகம் பக்கத்து ஊரில் இருந்ததால், அவரால் மகனுடன் குறைவான நேரத்தையே செலவிட முடிந்தது. அன்று ஞாயிற்றுக்கிழமை. காலையில் மகனுடன் தோட்டத்தில் விளையாடினார் நாகராசன். நண்பகலில் மூவரும் உணவருந்திவிட்டு, கேரம் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது நாகராசன் தன் மகனைப் பார்த்துக் கேட்டார், ‘ஆமாம், உனக்கு அப்பாவை ரொம்பப் பிடிக்குமா, அல்லது, அம்மாவைப் பிடிக்குமா’ என்று. பையன் உடனே சொன்னான், 'அம்மாவைப் பிடிக்கும்' என்று. இதைக் கேட்டு நாகராசன் வருத்தப்படவில்லை. தன் 10 வயதில், தன் பெற்றோர் இறப்பதற்கும் சில மாதங்களுக்கு முன்னர், தன் தந்தை இதே கேள்வியைக் கேட்டதும், அதற்கு, 'அம்மாவைத்தான்' என்று, தான் கூறியதும் நினைவுக்கு வந்தது. தன் தந்தைதான் தனக்கு மகனாக வந்து பாடம் சொல்லித் தருகிறாரோ என்ற ஒரு நிமிட மனப்பிரமை அவருக்கு. மகனைப் பெருமிதத்தோடு பார்த்தார் நாகராசன். மகன் சொன்னான், 'அப்பா, என்னைப் பொறுத்தவரையில், தந்தையிலும் தாயிலும் எந்த வித்தியாசமுமில்லை. அது உங்களுக்குத் தெரியும். இருப்பினும் நீங்கள் அந்தக் கேள்வியை விளையாட்டாகக் கேட்டபோது, நானும் விளையாட்டாகவே பதில் சொன்னேன். அது குறித்து நீங்கள் கவலைப்படவில்லை. ஏனெனில், உங்களைப் பொறுத்தவரையில், நான் உங்களிடம் அதிகப் பாசம் காட்டி அம்மாவின் மீதான பாசத்தைக் குறைத்து விடுவேனோ என்ற பயம் இருக்கிறது. நான் உங்களிடம் அளவுகடந்த பாசத்தோடு இருப்பது உங்களுக்குத் தெரியும். அதே அளவு பாசத்தைத்தான் அம்மாவிடமும் கொண்டிருக்கிறேன் என்பதை உங்களுக்கு உறுதிப்படுத்தவே இந்த பதிலைச் சொன்னேன்' என்றான்.  இப்போது நாகராசனுக்குப் புரிந்தது, தன் தந்தையும் தன் பதிலை நிச்சயம் அன்று புரிந்திருப்பார் என்று.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.