2017-07-05 16:19:00

பெருங்கடல்கள் பன்னாட்டு கருத்தரங்கில், கர்தினால் டர்க்சன்


ஜூலை,05,2017. குறுகிய காலக் கண்ணோட்டத்துடனும், கட்டுக்கடங்கா பேராசையுடனும் இயற்கை வளங்களை வீணாக்குவது, வருங்காலத்திற்கு நாம் இழைக்கும் பெரும் அநீதி என்று, வத்திக்கான் உயர் அதிகாரி ஒருவர், பன்னாட்டு கருத்தரங்கில் உரையாற்றினார்.

உரோம் நகரில், ஜூலை 4, இச்செவ்வாயன்று, நடைபெற்ற  பெருங்கடல்கள் பன்னாட்டு கருத்தரங்கில், ஒருங்கிணைந்த மனித முன்னேற்ற திருப்பீட அவையின் தலைவர், கர்தினால் பீட்டர் டர்க்சன் அவர்கள் உரையாற்றுகையில், இவ்வாறு கூறினார்.

நாம் வாழும் உலகில் 70 விழுக்காடு நீரால் நிறைந்த பகுதி என்றாலும், அதை சரிவர பராமரிக்காமல் இருப்பது, பூமி கோளத்தையே ஆபத்துக்கு இட்டுச்செல்லும் என்று கர்தினால் டர்க்சன் அவர்கள் தன் உரையில் எச்சரிக்கை விடுத்தார்.

பெருங்கடல்கள் அனைத்தும் மனிதர்களுக்கு வழங்கப்பட்டுள்ள கொடைகள் என்பதை மறந்து, அவற்றை வர்த்தகத்திற்குத் தேவையான முதலீடாக மட்டுமே காணும் குறுகிய கண்ணோட்டம் பல பிரச்சனைகளை உருவாக்குகின்றது என்று, கர்தினால் டர்க்சன் அவர்கள் கவலையை வெளியிட்டார்.

பன்னாட்டு கடற்படைகளின் அணிவகுப்பு, சட்டத்திற்குப் புறம்பான கடல்வழி வர்த்தகங்கள், புலம்பெயர்ந்தோர் மேற்கொள்ளும் ஆபத்தான பயணங்கள், கடல்நீரின் அமிலத்தன்மை அதிகரிப்பு ஆகியவை, பெருங்கடல்களைச் சுற்றி எழும் பிரச்சனைகள் என்று, கர்தினால் டர்க்சன் அவர்கள், தன் உரையில் சுட்டிக்காட்டினார்.

திருப்பீடத்திற்கென பணியாற்றும் பிரான்ஸ், மோனக்கோ, நெதர்லாந்து நாடுகளின் தூதரகங்களும், திருச்சிலுவை பாப்பிறை பல்கலைக்கழகமும் இணைந்து ஏற்பாடு செய்திருந்த இக்கருத்தரங்கை, பேராயர் சில்வானோ தொமாசி அவர்கள் வழிநடத்தினார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.