2017-07-07 16:06:00

பங்களாதேஷில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு காரித்தாஸ்


ஜூலை,07,2017. பங்களாதேஷ் நாட்டின் கிழக்குப் பகுதியில் பெய்த கனமழையால், ஏறத்தாழ பத்து இலட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளவேளை, அம்மக்களுக்கு உடனடி நிவாரணப் பணிகளை ஆற்றி வருகின்றது, அந்நாட்டு கத்தோலிக்க காரித்தாஸ் நிறுவனம்.

பங்களாதேஷில் பெய்த கனமழையால் நதிகளின் நீர்மட்டம் உயர்ந்து, வெள்ளம் பெருக்கெடுத்துள்ளவேளை, பல்லாயிரக்கணக்கான குடும்பங்களும் புலம்பெயர்ந்துள்ளன.  

பங்களாதேஷ் ஆயர்களின் சமூகநல அமைப்பான காரித்தாஸ் நிறுவனம், அரசு அதிகாரிகளுடன் இணைந்து, பாதிக்கப்பட்டுள்ள மக்களின் அத்தியாவசியத் தேவைகளை நிறைவேற்றி வருகிறது.

இவ்வெள்ளம் மற்றும், நிவாரணப் பணிகள் பற்றி, UCA செய்தியிடம் கூறிய, காரித்தாஸ் நிறுவனத்தின் பேரிடர் நிர்வாகப் பொறுப்பாளர் Daniel Snal அவர்கள், Sylhet மாநிலத்தில் மட்டும், மூன்று இலட்சம் முதல், நான்கு இலட்சம் மக்கள் வரை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும், நூற்றுக்கணக்கான குடும்பங்கள், வீடுகளைவிட்டு வெளியேற்றப்பட்டுள்ளன என்றும் கூறினார்.

பங்களாதேஷ் அரசு, ஏழைகளுக்கும், உதவி தேவைப்படும் ஏனைய மக்களுக்கும் உதவிகளை வழங்கிவரும்வேளை, அதிகாரிகள் குறிப்பிடும் இடங்களில், காரித்தாஸ் நிறுவனம் உதவிகளை வழங்கி வருகின்றது என, Snal அவர்கள், மேலும் கூறினார். 

ஆதாரம் : UCAN /வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.