2017-07-11 14:58:00

பாசமுள்ள பார்வையில் – துயருறுவோர், ஆறுதல் பெறுவர், தருவர்...


தன் மகனின் மரணத்தால் மனம் நொறுங்கிப்போன ஓர் இளம் தாய், ஊருக்கு நடுவிலிருந்த கோவிலுக்கு ஓடிச்சென்றார். அங்கிருந்த ஒரு குருவிடம், "என் மகனை மீண்டும் உயிரோடு கொண்டுவர உங்களிடம் மந்திரங்கள் உள்ளனவா?" என்று அழுதபடியே கேட்டார், அந்தத் தாய்.

குரு அவரிடம், "ஊருக்குள் போ, மகளே... எந்த ஒரு வீட்டில், இதுவரை, துயரம் எதுவும் நுழையவில்லையோ, அந்த வீட்டிலிருந்து ஒரு கோதுமை மணியைக் கொண்டுவா. அதை வைத்து நாம் மந்திரம் சொன்னால், உன் மகன் உயிர் பெறுவான்" என்று சொல்லி அனுப்பினார்.

இளம் தாய் உடனே புறப்பட்டுச் சென்றார். அழகு நிறைந்த ஒரு மாளிகை அவர் கண்ணில் பட்டது. அங்கு கட்டாயம் துயரம் எதுவும் நுழைந்திருக்காது என்று எண்ணிய தாய், அங்கு சென்று, "துயரம் நுழையாத ஓர் இல்லத்தைத் தேடி வந்துள்ளேன்" என்று சொன்னதும், அங்கிருந்தோர் அவரிடம், தங்களுக்கு நேர்ந்த துயரங்களையெல்லாம் கொட்டித் தீர்த்தனர். துயரத்தில் இருக்கும் தன்னால் இவர்களுக்கு தகுந்த ஆறுதல் தரமுடியும் என்று எண்ணிய தாய், அந்த மாளிகையில் இரு நாள்கள் தங்கி, அங்கிருந்தோருக்கு ஆறுதல் கூறிவந்தார்.

துயரமற்ற இல்லமாக இருக்கக்கூடும் என்றெண்ணி, அவர் நுழைந்த அனைத்து இல்லங்களிலும் துயரம் இருந்ததைக் கண்டு, அவர்களுக்கு ஆறுதல் அளிப்பதிலேயே தன் நேரத்தையெல்லாம் செலவிட்டார், அந்த இளம் தாய். அவர் உள்ளத்தை நிறைத்திருந்த துயரம், அவரிடமிருந்து விடைபெற்றுச் சென்றதை உணர்ந்தார்.

"துயருறுவோர் பேறுபெற்றோர்; ஏனெனில், அவர்கள் ஆறுதல் பெறுவர்" (மத்தேயு 5: 4) என்று இயேசு கூறியுள்ளார். ஆறுதல் பெறுவதால் மட்டுமல்ல, ஆறுதல் தருவதாலும் அவர்கள் பேறுபெற்றவராவர்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.