2017-07-13 15:01:00

உருவாக்கும் பயிற்சியாளர்களுக்கு கர்தினால் ஸ்டெல்லா


ஜூலை,13,2017. அருள்பணியாளர்களை உருவாக்கும் பணியில் ஈடுபட்டிருப்போர், அவர்களுக்கு, தந்தையாக, தாயாக, உடன்பிறந்தோராக இருந்து, அவ்விளையோரை வழி நடத்த அழைக்கப்பட்டுள்ளனர் என்று, வத்திக்கான் உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.

அருள்பணியாளர் பயிற்சியை மையப்படுத்தி அண்மையில் உரோம் நகரில் நடைபெற்ற கருத்தரங்கின் துவக்கத் திருப்பலியில், அருள்பணியாளர் பேராயத்தின் தலைவரான கர்தினால் பென்யமினோ ஸ்டெல்லா அவர்கள் மறையுரையாற்றுகையில், இவ்வாறு கூறினார்.

இறைவனோடும், கிறிஸ்துவோடும் கொள்ளும் உறவு, மற்ற அனைத்து உறவுகளுக்கும் மேலாக, முதன்மை இடம் பெறவேண்டும் என்பதை, அருள்பணியாளராக விரும்பும் இளையோர் முழுமையாக உணர்வதே, அவர்களுக்கு அளிக்கப்படும் பயிற்சியின் தலையாய நோக்கம் என்று, கர்தினால் ஸ்டெல்லா அவர்கள் தன் மறையுரையில் வலியுறுத்திக் கூறினார்.

உலக நிறுவனங்கள் தரும் பயிற்சிகளில், அதிகாரம், பணிகள் என்பனவற்றில் தங்கள் கவனத்தைச் செலுத்த பயிற்றுவிக்கப்படுவதுபோல், அருள்பணியாளர் பயிற்சியிலும் நிகழக்கூடாது என்பதை கர்தினால் ஸ்டெல்லா அவர்கள், தன் மறையுரையில் எடுத்துரைத்தார்.

அனைவரையும் வரவேற்று அரவணைக்கும் இதயம் கொண்டிருந்த இயேசுவைப்போல அருள்பணியாளரும், தன் இதயத்தை உருவாக்க வேண்டும் என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறிய வார்த்தைகளை, கர்தினால் ஸ்டெல்லா அவர்கள் தன் மறையுரையில் குறிப்பிட்டார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.