2017-07-13 15:20:00

பொதுநிலையினர், குடும்பம், வாழ்வு அவையின் புதிய இலச்சினை


ஜூலை,13,2017. பொதுநிலையினர், குடும்பம், வாழ்வு திருப்பீட அவை, புதிய இலச்சினை ஒன்றை உருவாக்கி, தன் புதிய வலைத்தளத்தை அண்மையில் துவக்கி வைத்தது.

கடந்த ஆண்டு செப்டம்பர் முதல் தேதியன்று செயலாற்றத் துவங்கிய இந்தப் புதிய திருப்பீட அவையின் இலச்சினை, திருஅவை, உலகெங்கும் உள்ள அனைத்துப் பொதுநிலையினரையும், குடும்பங்களையும் அணைத்து வழிநடத்துவது போல் அமைக்கப்பட்டுள்ளது.

புனித பேதுரு பசிலிக்காவுக்கு முன் உள்ள வளாகத்தில் பெர்னினி தூண்களுக்குப் பதிலாக, மக்கள் நிற்பதுபோல் உருவாக்கப்பட்டுள்ள இந்த இலச்சினை, அந்த வளாகத்தின் நடுவே நிற்கும் குடும்பங்களை இரு கரங்களைக் கொண்டு அணைப்பதுபோல் அமைந்துள்ளது.

அணைப்பதற்கு நீண்டிருக்கும் இந்தக் கரங்களின் இறுதியில் வாழ்வைக் குறிக்கும் அடையாளமாக, மலர்கள் பூத்திருப்பதுபோன்று இந்த இலச்சினை அமைக்கப்பட்டுள்ளது.

இந்த இலச்சினையைக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள புதிய வலைத்தளம் ஆங்கிலம், இத்தாலியம், இஸ்பானியம், போர்த்துகீசியம் ஆகிய நான்கு மொழிகளில் செயல்பட்டு வருகிறது.

ஆதாரம் : Zenit / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.