2017-07-14 16:03:00

காலநிலை மாற்றம் குறித்த உலகளாவிய முயற்சிக்கு திருத்தந்தை


ஜூலை,14,2017. இப்பூமி என்ற நம் பொதுவான இல்லத்தைப் பாதுகாப்பதற்கு ஊக்கமளிக்கும், “இறைவா உமக்கே புகழ் (Laudato Si’)” என்ற திருமடல் செயல்படுத்தப்பட, எடுக்கப்படும் உலகளாவிய முயற்சிக்கு, தனது ஆதரவைத் தெரிவித்துள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், 2015ம் ஆண்டில் வெளியிட்ட, இறைவா உமக்கே புகழ் என்ற திருமடலின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த, குறைந்தது பத்து இலட்சம் கத்தோலிக்கரை நேரிடையாக ஈடுபடுத்துவதற்கு, உலகளாவிய கத்தோலிக்க காலநிலை (Global Catholic Climate) என்ற இயக்கம் முயற்சித்து வருகிறது.

இந்த இயக்கத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் (livelaudatosi.org), இம்முயற்சிக்கு தனது ஆதரவை வெளியிட்டுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

கர்தினால்கள் டர்க்சன், தாக்லே, ரிபாட், கியூபிச், மார்க்ஸ் போன்றோர் உட்பட, பல திருஅவைத் தலைவர்களும், இம்முயற்சிக்குத் தங்களின் ஆதரவைத் தெரிவித்துள்ளனர் எனக் கூறப்பட்டுள்ளது.

இந்த வலைத்தளத்தில் தங்களின் ஆதரவைத் தெரிவிக்கும் விதமாக, கையெழுத்திடுபவர்கள், நம் பொதுவான இல்லத்தைப் பாதுகாப்பதற்காகச் செபிக்கவும், அதற்காக நடவடிக்கை எடுக்கவும், மிக எளிய வாழ்வு வாழவும், மற்றவர்களைத் தூண்டவும் வலியுறுத்தப்படுகின்றனர்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.