2017-07-17 16:03:00

கொரிய தீபகற்பத்தில் அமைதி ஒப்பந்தம் ஏற்பட அழைப்பு


ஜூலை,17,2017. கொரிய தீபகற்பத்தில் அமைதியைக் கொணர்வதற்கு திருஅவை கொண்டிருக்கும் கண்ணோட்டத்தோடு ஒத்திணங்கிச் செல்லும் தென்கொரிய புதிய அரசுத்தலைவரின் அமைதி முயற்சிகளை ஆதரிப்பதாக அறிவித்துள்ளனர், அந்நாட்டு ஆயர்கள்.

வட, மற்றும் தென்கொரியா நாடுகளின் வருங்கால உறவுகளுக்கு தென்கொரிய அரசுத் தலைவர் Moon Jae-in அவர்கள் எடுத்துவரும் முயற்சிகளோடு, முழு அளவில் ஒத்திணங்கிச் செல்வதாக உரைத்தார் தென் கொரிய ஆயர் பேரவை தலைவர், பேராயர் Hyginus Kim Hee-jung.

கொரிய தீபகற்பத்தில் அணு ஆயுதக் களைவை செயல்படுத்தும் நோக்கத்துடன், வட கொரியாவின் பாதுகாப்பிற்கு உறுதி வழங்கவும், இரு நாடுகளிடையே பொருளாதார மற்றும் சமூக உறவுகளை வளர்க்கவும், தான் தயாராக இருப்பதாக, தென் கொரிய அரசுத் தலைவர் அறிவித்துள்ளதற்கு, தென்கொரிய ஆயர்கள், தங்கள் முழு ஆதரவை ஏற்கனவே தெரிவித்துள்ளனர்.

சுற்றியிருக்கும் நாடுகளின் ஆதரவுடன், முதலில் இரு கொரிய நாடுகளிடையே ஓர் அமைதி ஒப்பந்தம் உருவாக்கப்பட வேண்டியது அவசியம் என்றார் பேராயர் கிம்.

ஏற்கனவே வட கொரியாவுக்கு, மருத்துக்களையும், விவசாய முன்னேற்றத்திற்குரிய உதவிகளையும் வழங்கிவரும் தென்கொரிய திருஅவை, அத்தகைய உதவிகளை தொடர்ந்து ஆற்றும் என்று தென் கொரிய ஆயர் பேரவைத் தலைவர் பேராயர் கிம் அவர்கள் உறுதியளித்தார்.

ஆதாரம்: UCAN /வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.