2017-07-18 14:33:00

பாசமுள்ள பார்வையில் – ஒருவர் மற்றொருவருக்கு வானதூதர்!


முதியோர் இல்லம் ஒன்றில் தன்னார்வப்பணியாளராகச் சேர்ந்த ஓர் இளம்பெண், தன் அனுபவத்தைப் பகிர்ந்துகொள்கிறார்:

அந்த முதியவரைக் காண நான் சென்றபோது, அவரது அறை இருளில் மூழ்கியிருந்தது. அவர் உறங்கியிருக்கக்கூடும் என்றெண்ணியவாறு கட்டிலை நெருங்கியபோது, அவர் விழித்திருப்பது தெரிந்தது. அத்துடன், அவரது உடல் நடுங்கிக் கொண்டிருந்தது, முகத்தில் மிகுந்த கலவரம் காணப்பட்டது. அவரது கரங்களைப் பற்றி, அமைதிப்படுத்த முயன்றேன். ஐந்து நிமிடம் சென்று, அவர் சிறிது கண்ணயர்ந்ததும், அவ்வறையைவிட்டு வெளியேறினேன்.

இரு நாள்கள் சென்று மீண்டும் நான் அவரைக் காணச் சென்றபோது, அந்த அறை முழுவதும் வெளிச்சமாக இருந்தது. அந்த முதியவரின் மகள் கட்டிலருகே அமர்ந்திருந்தார். முதியவரும் தெளிவான முகத்துடன், என்னைப் பார்த்து சிரித்தார். இரு நாள்களுக்கு முன் நான் அங்கு வந்து சென்றதையும், ஒருவேளை அவருக்கு அது நினைவிருக்காது என்றும் நான் சொன்னேன். உடனே, அந்த முதியவர், "உங்களை எனக்கு நன்றாக நினைவிருக்கிறது. நீங்கள்தான், இருள்சூழ்ந்த என் உலகில் நம்பிக்கையைக் கொண்டுவந்த வானதூதர்" என்று கூறினார். அவர் சொன்னதை நான் நம்பவில்லை என்பதை புரிந்துகொண்ட அவர், அன்று நான் உடுத்தியிருந்த உடை, நான் அவரைக் காணச் சென்ற நேரம், அவரிடம் சொன்ன ஒருசில வார்த்தைகள், ஆகியவற்றைத் துல்லியமாகக் கூறினார். எனக்கு ஒரே ஆச்சரியம்.

நான் அன்று செய்ததெல்லாம், ஐந்து நிமிடங்கள் அவர் கரங்களைப் பற்றியிருந்தது ஒன்றுதான். இருந்தாலும், நான் அவரை, சாவின் வாசலிலிருந்து மீண்டும் வாழ்வுக்கு அழைத்து வந்தேன் என்றெல்லாம் அவர் கூறினார். அந்த 5 நிமிட அனுபவம் இவ்வளவு ஆழமான பாதிப்பை உருவாக்கும் என்று நான் கனவிலும் நினைக்கவில்லை. அன்று முதல், வாழ்வை, நான் காணும் கண்ணோட்டம் மாறியது.

இது நடந்து, இப்போது, 25 ஆண்டுகள் ஆகிவிட்டன. இருப்பினும், அந்த முதியவரின் நினைவு எனக்குள் நேர்மறையான மாற்றங்களை இன்றும் உருவாக்கி வருகிறது. அவரது வாழ்வில் நுழைந்த வானதூதர் என்று அவர் என்னைப்பற்றிக் கூறினார். ஆனால், அவர், என் வாழ்வில் நுழைந்த வானதூதர் என்பதை, நான் முழுமையாக நம்புகிறேன்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.