2017-07-24 16:05:00

சாம்பியாவில் திருஅவையின் பணி மகத்தானது, துணை அரசுத்தலைவர்


ஜூலை,24,2017. ஆப்ரிக்க நாடுகளில் ஒன்றான சாம்பியாவில், பல்வேறு கல்வி மற்றும் நல ஆதரவுத் திட்டங்கள் வழியாக, நாட்டைக் கட்டியெழுப்பும் பணியில் ஈடுபட்டுவரும் அந்நாட்டு கத்தோலிக்கத் திருஅவையைப் பாராட்டுவதாக தெரிவித்தார், அந்நாட்டு துணை அரசுத் தலைவர் Inonge Wina.

சாம்பியா நாட்டில் கத்தோலிக்கத் திருஅவை வேரூன்றி வளரத் துவங்கியதன் 125ம் ஆண்டுக் கொண்டாட்டங்களின் நிறைவு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு உரையாற்றிய துணை அரசுத்தலைவர்  Wina அவர்கள், சமூகப் பணிகளை மக்களுக்கு வழங்குவதில் மட்டுமல்ல, மக்களின் ஒன்றிணைந்த வளர்ச்சிக்காக உழைப்பதிலும் அரசோடு ஒன்றிணைந்து உழைக்கும் திரு அவையை, தான் பாராட்டுவதாகத் தெரிவித்தார்.

அரசு குறித்த திருஅவையின் விமர்சனங்கள், சில வேளைகளில், கடுமையானதாக இருந்தாலும், திருஅவையின் குரலுக்கு எப்போதும் அரசு செவிமடுத்தே வருகின்றது எனவும் கூறினார், துணை அரசுத்தலைவர் Wina.

1891ம் ஆண்டு சாம்பியாவில் கத்தொலிக்க மதம் தன் பணிகளைத் துவக்கியதன் 125ம் ஆண்டுக் கொண்டாட்டங்கள், கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 6ம் தேதி துவக்கப்பட்டு, தற்போது முடிவுக்கு வந்துள்ளன.

ஆதாரம்: வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.