2017-07-27 14:29:00

பாசமுள்ள பார்வையில்.. மகனிடம் மன்னிப்பு கேட்ட தாய்


“மகனே, உன்னை எங்களால் காப்பாற்ற இயலவில்லை. இதற்காக நானும், உன் அப்பாவும் மிகவும் மனம் வருந்துகின்றோம், வேதனைப்படுகின்றோம், உன்னிடம் மன்னிப்புக் கேட்கின்றோம். மகனே, உனது உறுப்புகள் செயலிழக்கத் தொடங்கிய நேரம் முதல், உன்னைக் காப்பாற்றுவதற்கு, எவ்வளவு முயற்சிகள் எடுக்க முடியுமோ அவ்வளவு முயற்சிகளையும், ஏறக்குறைய கடந்த 12 மாதங்களாக, எடுத்தோம். எல்லா முயற்சிகளுமே, மோசமாகவே எங்கள் வாழ்வில் நடந்தன. ஆனால், மகனே நீ எப்போதும் எங்களுக்கு மகனே. எங்களின் அழகான குட்டி மகன் இவ்வுலகைவிட்டுப் போகட்டும் எனச் சொல்வதைப் போன்ற கடினமான காரியம் வேறு எதுவும் இல்லை. நாங்கள் சொல்லவேண்டிய மிக கடினமான கூற்று இது”.

இவ்வாறு, தன் இதயத்தைக் கல்லாக்கிக் கொண்டு, பிரித்தானிய தாய் ஒருவர், அறிக்கை ஒன்றை, இவ்வாரத்தில் வெளியிட்டுள்ளார். இலண்டனில், பிறக்கும்போதே மரபணு குறைபாட்டுடன் பிறந்துள்ள 11 மாதக் குழந்தை சார்லி கார்டுக்கு (Charlie Gard), சிகிச்சைகள் வழங்கும் மருத்துவர்கள், தொடர்ந்து சிகிச்சையளிப்பது பலனற்றது எனக் கைவிரித்துவிட்டனர். இந்நிலையில், ஒரு மூன்றுமாதம் அமெரிக்க ஐக்கிய நாட்டில் பரிசோதனை முறையில் சிகிச்சையளிக்க பெற்றோர் விரும்பினர். ஆனால் பிரித்தானிய மற்றும் ஐரோப்பிய நீதிமன்றங்கள் அதற்கு அனுமதியளிக்கவில்லை. அமெரிக்க ஐக்கிய நாட்டு நரம்பியல் நிபுணர் ஒருவரும், குழந்தை சார்லிக்கு, பரிசோதனை முறையில் சிகிச்சையளிப்பது எவ்விதத்திலும் பயன்தாராது என அறிவித்துவிட்டார். இந்நிலையில், சார்லியின் பெற்றோர் (Chris Gard 32, Connie Yates 31), சட்டமுறைப்படி தாங்கள் எடுத்துவந்த நடவடிக்கையை, நிறுத்திக்கொள்வதாக இத்திங்களன்று அறிவித்தனர். அதன்பின் சார்லியின் அம்மா, தன் அன்பு மகனுக்குச் சொல்வதாக விடுத்த அறிக்கையில், தங்களின் இந்த முடிவுக்காக, மகனிடம் மன்னிப்புக் கோரியுள்ளார். திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் உட்பட, உலகின் பல இடங்களிலிருந்து இலட்சக்கணக்கான மக்கள், சார்லியின் பெற்றோருக்கு ஆதரவாக இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.   

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.