2017-07-27 15:57:00

மன்னிப்பின் சக்தியை சொல்லித்தரும் திருஅவைக்கு நன்றி


ஜூலை,27,2017. மன்னிப்பின் சக்தியை பிரெஞ்சு மக்களுக்கு தொடர்ந்து சொல்லித்தரும் கத்தோலிக்கத் திருஅவைக்கு தான் நன்றி சொல்வதாக, பிரெஞ்சு அரசுத் தலைவர், Emmanuel Macron அவர்கள் இப்புதனன்று நடைபெற்ற ஒரு சிறப்பு வழிபாட்டு நேரத்தில் கூறினார்.

85 வயது நிறைந்த அருள்பணி Jacques Hamel அவர்கள் கொல்லப்பட்டதன் முதலாம் ஆண்டு நினைவுத் திருப்பலியில் கலந்துகொண்ட அரசுத்தலைவர் Macron அவர்கள், திருப்பலியின் இறுதியில் பேசுகையில் இவ்வாறு கூறினார்.

Saint-Etienne-du Rouvray என்ற ஊரில், அருள்பணி Hamel அவர்கள் திருப்பலியாற்றிய அதே கோவிலின் வளாகத்தில், Rouen உயர்மறைமாவட்டப் பேராயர் Dominique Lebrun அவர்கள் நிறைவேற்றிய திருப்பலியில், ஆயிரக்கணக்கான கத்தோலிக்கர்களும், இஸ்லாமியரும் கலந்துகொண்டனர் என்று ஊடகங்கள் கூறுகின்றன.

ஆலயத்தில், திருப்பலியாற்றிய வேளையில், அருள்பணி Hamel அவர்களின் குரலை நிறுத்திவிட்டதாக இரு இளையோர் நினைத்தாலும், அருள்பணியாளர் இறந்தபின், அன்பு, மன்னிப்பு ஆகியவற்றை இன்னும் சக்திவாய்ந்த முறையில் அவர் போதித்து வருகிறார் என்று பேராயர் Lebrun அவர்கள் தன் மறையுரையில் கூறினார்.

இந்த ஆலயத்தின் பீடத்தருகே வெறுப்பை விதைப்பதாக இரு இளையோர் நினைத்தனர், ஆனால், அவர்களின் எண்ணங்கள் தவறு என்பதை பிரெஞ்சு நாட்டு கத்தோலிக்கரும், இஸ்லாமியரும் உலகிற்கு உணர்த்தியுள்ளனர் என்று அரசுத்தலைவர் Macron தன் உரையில் குறிப்பிட்டார்.

அருள்பணி Hamel அவர்கள் கொலையுண்ட கோவில், ஒரு திருத்தலமாக மாறிவருகிறது என்றும், இந்த முதலாம் ஆண்டு நினைவுத் திருப்பலியில் கலந்துகொள்ள கானடா, எகிப்து, இங்கிலாந்து ஆகிய நாடுகளிலிருந்து மக்கள் வந்திருந்தனர் என்றும் ஆசிய செய்தி கூறுகிறது.

ஆதாரம் : AsiaNews / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.