2017-08-01 15:39:00

இஸ்லாமிய தீவிரவாதத்தால் விதவைகளானவர்களுக்கு திருஅவை உதவி


ஆக.,01,2017. நைஜீரியாவின் வடபகுதியில் இஸ்லாமியத் தீவிரவாதிகளின் வன்முறைகளால், தங்கள் வாழ்க்கைத் துணையை இழந்துள்ள ஏறத்தாழ 5,000 கைம்பெண்களுக்கு வாழ்வாதாரங்களை வழங்க முன்வந்துள்ளது Aid to the Church in Need என்ற கிறிஸ்தவ உதவி அமைப்பு.

நைஜீரியாவின் Boko Haram இஸ்லாம் தீவிரவாதிகள், அந்நாட்டின் வடபகுதியிலுள்ள Maiduguri மறைமாவட்டத்திற்குச் சென்று, அங்குள்ள கிறிஸ்தவ வீடுகளில் புகுந்து மதம் மாற கட்டாயப்படுத்துவதாகவும், மதம் மாற மறுக்கும் ஆண்களை, குடும்ப உறுப்பினர்களின் கண் முன்னாலேயே கொலைசெய்வதாகவும், அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

இதனால் கைம்பெண்களாக்கப்பட்ட பெண்களுக்கும் அவர்களின் குழந்தைகளுக்கும் உதவும்பொருட்டு, 70 ஆயிரம் யூரோக்களை வழங்கி, திட்டம் ஒன்றை துவக்கியுள்ளது Aid to the Church in Need அமைப்பு.

நைஜீரியாவின் வடபகுதியில் உள்ள Maiduguri மறைமாவட்ட ஆயர் Oliver Dashe Doeme    அவர்கள் துவக்கியுள்ள புனித யூதித் கைம்பெண்கள் அமைப்பின் வழியாக உதவிகள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Aid to the Church in Need அமைப்பு திரட்டியுள்ள தகவல்களின்படி, இஸ்லாமிய வன்முறைகளால் 2 கோடியே 60 இலட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர், 23 இலட்சம் குழந்தைகள் கல்வி கற்கச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.