2017-08-02 15:35:00

ஊழலுக்கு எதிராக திருப்பீட அவை முயற்சிகளின் அறிக்கை


ஆக.02,2018. ஊழலுக்கு எதிரான முயற்சிகள், மேடைகளில் முழங்கப்படும் உரைகளாக மட்டுமல்லாமல், நடைமுறையில், குறிப்பாக, கல்வி வழியே மக்களை சென்றடையவேண்டும் என்று, ஒருங்கிணைந்த மனித முன்னேற்ற திருப்பீட அவை ஓர் அறிக்கையில் கூறியுள்ளது.

இவ்வாண்டு ஜூன் மாதம், வத்திக்கானில் நடைபெற்ற 'ஊழலுக்கு எதிரான உலக விவாதம்' என்ற கருத்தரங்கில் பகிர்ந்துகொள்ளப்பட்ட கருத்துக்களைத் தொகுத்து, இத்திருப்பீட அவை, இப்புதனன்று அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.

"பொருள், அரசியல், ஆன்மீகம் என்ற அனைத்து நிலைகளிலும் சக்தி மிக்கவர்கள், ஊழலின் ஈர்ப்புக்கு இடம் கொடாமல் இருக்க செபிப்போம்" என்பது,

2018ம் ஆண்டு பிப்ரவரி மாதம் திருத்தந்தை வெளியிடவிருக்கும் செபக்கருத்து என்று, இவ்வறிக்கையின் ஆரம்பத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஊழல் என்பது, பல்வேறு நிலைகளில், துறைகளில் காணப்படும் வெறும் செயல்பாடு மட்டுமல்ல, மாறாக, அது, சமுதாயத்தில் ஊடுருவியுள்ள ஒரு கலாச்சாரமாக மாறியிருப்பதால், அதை வேரோடு களைவதற்கு, கல்வி, பணியிடங்களில் தரப்படும் பயிற்சி, மக்களுக்குத் தேவையான விழிப்புணர்வு என்று பல்முனை முயற்சிகள் தேவை என்று இவ்வறிக்கை வலியுறுத்துகிறது.

ஒருங்கிணைந்த மனித முன்னேற்ற திருப்பீட அவை மேற்கொள்ளும் முயற்சிகளின் ஓர் அங்கமாக, இவ்வாண்டு செப்டம்பர் மாதம் முதல், 'நீதி குறித்த பன்னாட்டு கலந்தாய்வு குழு' ஒன்று நிறுவப்படும் என்றும், இக்குழுவின் பணிகள் குறித்த 21 பரிந்துரைகளும் இவ்வறிக்கையில் வெளியிடப்பட்டுள்ளன.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.