2017-08-07 16:09:00

ஒன்றிப்பிற்காக இயேசுவைப்போல் உழையுங்கள்


ஆக‌.07,2017. வரும் ஆண்டு ஜனவரியில் பெரு நாட்டிற்கு திருப்பயணம் மேற்கொள்ள உள்ளதை முன்னிட்டு, அம்மக்களுக்கு சிறப்பு ஒலி ஒளிச் செய்தியொன்றை அனுப்பியுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

லீமா நகர் பேராயர் கர்தினால் Juan Luis Cipriani Thorne அவர்கள் வழியாக திருத்தந்தை அனுப்பியுள்ள இச்செய்தியில், பெரு நாட்டு மக்கள் அனைவரும், ஒன்றிப்பிற்காக உழைக்கவேண்டும் என அழைப்பு விடுத்துள்ளார்.

எண்ணற்ற வளங்களைக் கொண்டுள்ள பெரு நாட்டில், திருத்தந்தைக்கு விருப்பமான புனிதர்கள் என்ற வளமும் நிறையவே உள்ளது என தன் செய்தியில் கூறியுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தென் அமெரிக்கத் திருஅவையைக் கட்டியெழுப்ப, பெரு நாட்டுப் புனிதர்கள் பெருமளவில் உதவியுள்ளனர் எனபதையும் சுட்டிக்காட்டியுள்ளார். 

பிரிவினைகளால் பாதிக்கப்பட்டிருந்த சமூகத்தை மீண்டும் கட்டியெழுப்ப, இயேசுவின் பாதையில் வழிநடந்த அவர்களை எடுத்துக்காட்டுகளாகக் கொண்டு, பெரு நாட்டு மக்கள் இன்றும் செயல்படவேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

நம்பிக்கையின்மையோடும், கசப்புணர்வுகளோடும் வருங்காலத்தை நோக்குபவர்கள், கிறிஸ்தவர்களாக இருக்க முடியாது என்ற திருத்தந்தை, நம்பிக்கை, மற்றும் ஒன்றிப்பிற்காக, பெரு நாட்டு மக்கள் ஒவ்வொருவரும் உழைக்கவேண்டும் என அந்நாட்டிற்கு அனுப்பியுள்ள செய்தியில் கேட்டுக் கொண்டுள்ளார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.