2017-08-07 15:34:00

பாசமுள்ள பார்வையில்:முதுமைத்தாயின் விரக்தியைவிரட்டிய சிறுவன்


கிறிஸ்தவப் போதகர் ஒருவர், தனது 11 வயது மகன் பெனியுடன், ஞாயிறுக்கிழமை பிற்பகலில் நகரத்தின் தெருக்களுக்குச் சென்று, நற்செய்தி துண்டுப் பிரசுரங்களை தவறாமல் விநியோகித்து வந்தார். பனிவிழும் குளிர்காலத்தில் ஒரு ஞாயிறு பிற்பகலில், போதகர் புறப்படாமலிருந்தார். அப்பா, இன்று நாம் நகரத்திற்குப் போகவில்லையா? எனக் கேட்டான் பெனி. இல்லை மகனே, வெளியே பனி அதிகமாக விழுந்து கொண்டிருக்கின்றது என்றார் தந்தை. அப்பா, பனி விழுந்தால், நகரத்திற்கு மக்கள் போக மாட்டார்களா? எனக் கேட்டு, நான் போகிறேன் எனச் சொல்லிவிட்டு சென்றான் பெனி. தன்னிடமிருந்த நற்செய்தி பிரசுரங்களைக் கொடுத்து முடித்ததும், ஒன்று மீதியாக இருந்தது. வீட்டிற்குத் திரும்பிய வழியில், ஒரு வீட்டைப் பார்த்து, அழைப்பு மணியை அழுத்தினான் பெனி. கதவு திறக்கப்படவேயில்லை. தொடர்ந்து அழுத்திக்கொண்டேயிருந்தான். பின் கதவைத் தொடர்ந்து தட்டினான். அதன்பிறகு ஒரு பாட்டி கதவைத் திறந்து வெளியே பார்த்தார். பெனி சிரித்த முகத்துடன், பாட்டி, இயேசு உங்களை அன்பு செய்கிறார் என்று சொல்லி, அந்தப் பிரசுரத்தைக் கொடுத்துவிட்டுச் சென்றான். கதவை அடைத்துவிட்டு அதை வாசித்தார் பாட்டி. அதற்கு அடுத்த ஞாயிறு, செபக் கூட்டத்திற்கும் சென்றார் பாட்டி. புதிதாக வந்திருந்த பாட்டியிடம் போதகர் பேசினார். பாட்டி எல்லார் முன்னிலையிலும் இவ்வாறு சொன்னார்.

எனது அன்பான கணவரும் நானும் தனியாக வாழ்ந்து வந்தோம். சில ஆண்டுகளுக்கு முன் என் கணவர் திடீரென இறந்துவிட்டார். பின் தனிமையில் விடப்பட்டேன். உறவினர்களோ, பிள்ளைகளோ எவரும் என்னைப் பார்க்க வரவில்லை. ஒவ்வொருவரும் அவரவர் குடும்பங்களோடு இருக்கின்றார்கள். பின், இறைவனும் என்னைக் கைவிட்டு விட்டார் என்ற உணர்வு ஏற்பட்டது. வாழ்வில் விரக்தியடைந்த நான், அந்தச் சிறுவன் எனது வீட்டு அழைப்பு மணியை அழுத்திய நேரத்தில், தூக்கில் தொங்குவதற்காக, அறையில் எல்லாவற்றையும் தயார் செய்து முடித்திருந்தேன். நாற்காலியில் ஏறி, கயிற்றில் எனது கழுத்தை மாட்டப்போன நேரத்தில், அந்த மணிச் சப்தம் கேட்டது. நின்றுவிடும் என நினைத்தேன். ஆனால் தொடர்ந்து விடாமல் மணி அடித்துக்கொண்டிருந்ததால், எரிச்சலோடு கதவைத் திறந்தேன். அந்த பிஞ்சு சிரித்த முகத்தைக் கண்டேன். அந்த சிறுவன் முகத்தில் தெரிந்த ஒளியும், அவன் கூறிய வார்த்தைகளும் என் முடிவை மாற்றின. நான் இப்போது இறைவனின் மகிழ்வான ஒரு குழந்தையாக உள்ளேன்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.