2017-08-09 16:51:00

குழந்தை இயேசு மருத்துவமனையும், ஐ.நா.அமைப்பும் ஒப்பந்தம்


ஆக.09,2017. உரோம் நகரில் இயங்கி வரும் குழந்தை இயேசு மருத்துவமனையும், ஐ.நா. புலம்பெயர்ந்தோர் அமைப்பும், ஜோர்டான் நாட்டில் குழந்தைகள் பராமரிப்பை இணைந்து நடத்தும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன.

திருப்பீடத்தின் ஆதரவுடன், குழந்தைகள் நலனில் தனி கவனம் செலுத்தும் குழந்தை இயேசு மருத்துவமனை, ஜோர்டான் நாட்டில் துன்புறும் புலம்பெயர்ந்த குழந்தைகளுக்குத் தேவையான மருத்துவ உதவிகளைச் செய்வதற்கு, இந்த ஒப்பந்தம் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த ஒப்பந்தத்தின் பயனாக, ஜோர்டான் நாட்டில் தஞ்சம் புகுந்துள்ள குடும்பங்களில், உயிருக்குப் போராடும் 300 குழந்தைகளுக்கு தீவிர சிகிச்சை அளிக்கும் வகையில் ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

ஐ.நா. புலம்பெயர்ந்தோர் அமைப்பு, ஜோர்டான் நாட்டில் அளித்து வரும் மருத்துவ உதவிகள் அடிப்படை நிலையில் உள்ள வேளை, குழந்தைகள் இயேசு மருத்துவமனை, உயர்தர மருத்துவ உதவிகளை வழங்க, இந்த ஒப்பந்தம் உருவாக்கப்பட்டுள்ளது.

ஜோர்டான் நாட்டில் தற்போது, 40 நாடுகளைச் சேர்ந்த 7 இலட்சத்திற்கும் அதிகமான புலம்பெயர்ந்தோர் உள்ளனர் என்றும், இவர்களில், 1,500 குழந்தைகளின் உடல் நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது என்றும், ஐ.நா. புலம்பெயர்ந்தோர் அமைப்பு கூறியுள்ளது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.