2017-08-16 15:02:00

பாசமுள்ள பார்வையில்... பாட்டியின் பாசத்தில் பேரன்


குமார் தனது குழந்தைப் பருவ அனுபவத்தை இவ்வாறு நினைவுகூர்கின்றார். அப்போது எனக்கு நான்கு வயது இருக்கும். என்னைச் சாப்பிட வைத்து, பள்ளிக்கு அனுப்புவதற்கு பெற்றோர் மிகவும் கஷ்டப்பட்டனர். அவ்வளவு சுட்டிப் பையன் நான். அன்று பள்ளிப் பேருந்து வர சிறிது நேரமே இருந்தது. அதனால், எனக்கு சாப்பாடு ஊட்டும் பொறுப்பை பாட்டியிடம் ஒப்படைத்துவிட்டு அலுவலகத்திற்குப் புறப்பட்டார் அப்பா. அன்றும் நான் வழக்கம்போல் அழுதுகொண்டே எழுந்தேன். வீட்டில் புதிதாகப் பாட்டியைப் பார்த்ததும், எனது அழுகை இன்னும் அதிகம் ஆனது. ஏனென்றால் நாங்கள்தான் வருடத்திற்கு ஒருமுறை பாட்டி வீட்டுக்குப் போவோம். சிறிது கண்ணைத் திறந்து என் பாட்டியின் முகத்தைப் பார்த்தேன். நான் இவ்வளவு பிரச்சனை செய்த பிறகும், என் அப்பா, அம்மா போன்று, பாட்டி முகத்தில் கோபம் இல்லை. அதற்கு மாறாக, பாட்டியிடம் ஓர் அழகான புன்னகை மட்டுமே இருந்தது. அதுவே எனக்கு சற்று வித்தியாசமாகத் தெரிந்தது. என் பாட்டி, சாப்பாட்டு தட்டோடு என் முன்னால் வந்து, கண்ணா இங்க பார்…என்று சொல்ல, நான் அழுதுகொண்டே, தலையை ஆட்டி முடியாது என்றேன். பாட்டி புன்னகையோடு, “இங்க பார் கண்ணா, இப்போ பாட்டி உனக்கு ஒரு கதை சொல்லப்போறேன், என்ன ஓகே-யா?” எனச் சொன்னதும், நான் அழுகையை நிறுத்திட்டு அவர்கள் முகத்தைப் பார்த்தேன். “ஆனா, கதை கேட்கண்ணும்னா கண்ணை மூடித்தான் கேட்கனும்” என்று பாட்டி சொல்ல, நான் அவர்கள் முகத்தை ஒரு கேள்வியோடு பார்த்துவிட்டு, திரும்பவும் அழ ஆரம்பித்தேன். அப்போது பாட்டி என்னைப் பார்த்து, “சரி போ, உனக்கு கதையும் கிடையாது, சாப்பாடும் கிடையாது,” எனச் சொல்லிவிட்டார்கள். எப்பொழுதும் நான்தான் சாப்பாடு வேண்டாம் எனச் சொல்வேன், அம்மா என் பின்னாலேயே ஓடி வருவார்கள், இப்போது எல்லாமே தலைகீழாக நடக்கிறதே என நினைத்து, நானும் கண்ணை மூடிக்கொண்டு உட்கார்ந்தேன். எனக்குப் பசி வேறு. என் பாட்டி கதை சொல்ல ஆரம்பித்தார்கள். “ஒரு ஊர்ல, ஒரு பெரிய காடு இருந்துச்சாம். அங்க, ஒரு குட்டிப் பையனும் அவங்க அம்மா, அப்பாவும் இருந்தாங்களாம். அந்த குட்டிப் பையன்தான் நீ. அந்த குட்டிப் பையன் தினமும் காலையில எழுந்ததும் காட்டுல வாக்கிங் போவானாம். அந்தப் பாதை பச்ச பசேல்னு அழகான புல்வெளியாம். கண்ணா புல்வெளி தெரியுதா?” என்று பாட்டி கேட்க, நானும், தெரியுது பாட்டி என்று சொன்னேன். திடீர்னு மேலேர்ந்து ஓர் அன்னப்பறவை பறந்து கீழவந்து, அந்த பையன் கையப் பிடிச்சுட்டு மேல பறக்க ஆரம்பிச்சுச்சு… திடீர்னு பறவைக்கு தாகம் எடுத்தது. என்ன பண்றதுன்னு தெரியாம அது கடவுளை வேண்டுச்சு. உடனே கடவுள் மழை வரவழைச்சுட்டார். உடனே பறவை ஆ காட்டி தண்ணி குடிச்சதாம்.” கண்ணா, உனக்கு தாகமா இல்லையான்னு கேட்டாங்க பாட்டி… நானும் ஆ காட்டினேன். பார்த்தால், என் வாயில் ஒரு சாப்பாட்டு உருண்டை வந்து விழுந்தது. வேற வழி இல்லை, முழுங்கித்தானே ஆக வேண்டும். அப்படியே கதையைத் தொடர்ந்தார்கள் பாட்டி. என் தட்டிலிருந்த எல்லா இட்லிகளையும் சாப்பிட்டு முடித்துவிட்டேன். அதற்குப்பின் பாட்டி கதை சொல்லி சாப்பிடுவது எனக்குப் பழக்கமாகிவிட்டது. அன்று பள்ளி முடிந்து வேகமாக வீட்டுக்கு வந்தேன். காலையில் முடிக்காத கதையைக் கேட்கும் ஆர்வத்தில், அன்றைக்கு நான் ஏழு மணிக்கே தயாராக இருந்தேன். பாட்டி, வாங்க சாப்பிடப் போகலாம், அந்த கர்ணன் கதை கடைசியாக எப்படி முடிந்தது எனச் சொல்லவேண்டும்…”என கூப்பிட்டுக்கொண்டே இருந்தேன். ஆனால் என் பாட்டி எழுந்திருக்கவே இல்லை. இப்போது என் பாட்டியின் கனவுப்படி பட்டம் பெற்று வேலையும் செய்கிறேன். பாட்டிகளின் முக்கியத்துவம் பற்றி, ஓய்வுநேரங்களில் பிறருக்கு எடுத்துச் சொல்லி வருகிறேன். குமாரின் பகிர்வு இவ்வாறு இருந்தது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.