2017-08-17 16:07:00

ஆகஸ்ட் 25ம் தேதி கடைப்பிடிக்கப்படும் ‘கந்தமால் நாள்’


ஆக.17,2017. ஒடிஸ்ஸாவின் கந்தமால் பகுதியில் 2008ம் ஆண்டு ஆகஸ்ட் 25ம் தேதி முதல் பல நாட்களாக நடைபெற்ற கொடுமைகளால் பாதிக்கப்பட்டோர் அனைவருக்கும் முழுமையான நீதி கிடைக்கவேண்டும் என்று, ஆகஸ்ட் 25ம் தேதி கடைப்பிடிக்கப்படும் ‘கந்தமால் நாள்’ அன்று மீண்டும் விண்ணப்பங்கள் விடுக்கப்படும் என, இந்தியாவின் முன்னணி சமுதாய அமைப்பு அறிக்கை விடுத்துள்ளது.

2008ம் ஆண்டு கிறிஸ்தவர்களுக்கு எதிராக இந்து அடிப்படைவாத குழுக்களால் கட்டவிழ்த்துவிடப்பட்ட வன்முறைகளைத் தொடர்ந்து, இந்தியாவின் 70க்கும் மேற்பட்ட சமூக நீதி அமைப்புக்கள் இணைந்து, தேசிய ஒருமைப்பாட்டு கழகத்தை (National Solidarity Forum) உருவாக்கின.

கந்தமால் வன்முறைகளில் பாதிக்கப்பட்டோருக்கு நீதி கிடைக்கவேண்டுமென்று, இக்கழகம் கடந்த சில ஆண்டுகளாக முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது.

இந்த முயற்சிகளின் தொடர்ச்சியாக, இவ்வமைப்பினர் உருவாக்கியுள்ள பத்து கோரிக்கைகளுடன், ஆகஸ்ட் 26, 27 ஆகிய இரு நாட்கள், கந்தமால் மாவட்டம், உதயகிரி எனுமிடத்தில் பொதுக்கூட்டமும், ஊர்வலமும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

கந்தமால் பகுதிகளில் நிகழ்ந்த வன்முறைகளையொட்டி, 3,300க்கும் அதிகமான புகார்கள் சமர்ப்பிக்கப்பட்டபோதிலும், அவற்றில் 820 மட்டுமே ஏற்றுக்கொள்ளப்பட்டன என்பதும், இவற்றில், 518 புகார்கள் மட்டுமே உண்மையென்று கூறப்பட்டுள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கன.

ஆதாரம் : AsiaNews / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.