ஆக.17,2017. சியேரா லியோன் நாட்டின் ஃப்ரீடவுன் (Freetown) எனுமிடத்தில், வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் உயிரிழந்தோர், மற்றும் பாதிக்கப்பட்டோருக்கு தன் ஆழ்ந்த வருத்ததைத் தெரிவித்து, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இப்புதனன்று தந்தியொன்றை அனுப்பியுள்ளார்.
ஃப்ரீடவுன் உயர் மறைமாவட்டத்தின் பேராயர் எட்வார்ட் தம்பா (Edward Tamba) அவர்களுக்கு, திருப்பீடச் செயலர், கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்கள், திருத்தந்தையின் சார்பில், இத்தந்தியை அனுப்பியுள்ளார்.
இறந்தோர் அனைவருக்காகவும், அவர்களைச் சார்ந்த குடும்பத்தினருக்காகவும் தான் வேண்டிவருவதாக, இத்தந்தியில் கூறியுள்ள திருத்தந்தை, இந்த நெருக்கடியான வேளையில், மக்களுக்கென பணியாற்றும் அனைத்து பணியாளர்களுடன் தான் செபத்தில் ஒன்றித்திருப்பதாகக் கூறியுள்ளார்.
ஆகஸ்ட் 14ம் தேதி ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் இதுவரை 300க்கும் அதிகமானோர் பலியாகியுள்ளனர் என்றும், இந்த எண்ணிக்கை இன்னும் அதிகமாகும் என்றும் ஊடகங்கள் கூறிவருகின்றன.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
All the contents on this site are copyrighted ©. |