2017-08-18 16:00:00

பார்சலோனா தாக்குதலுக்கு இந்திய ஆயர் கண்டனம்


ஆக.18,2017. பார்சலோனா நகரில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு எதிராக தனது கண்டனத்தை வெளியிட்ட, இந்திய பேராயர் ஃபெலிக்ஸ் அந்தோனி மச்சாடோ அவர்கள், மனித சமுதாயம் மகிழ்வாக வாழும் கனவை கைவிட்டதுபோல் தெரிகின்றது என்று தெரிவித்தார்.

ஆசிய ஆயர் பேரவைகளின் கூட்டமைப்பின் கிறிஸ்தவ ஒன்றிப்பு மற்றும், பல்சமய உரையாடல் ஆணைக்குழுவின் தலைவரான, வாசாய் பேராயர் மச்சாடோ அவர்கள், அமைதியை விரும்பும் மதங்களின் தலைவர்களிடையே சந்திப்புக்களை ஊக்குவித்துள்ளார்.

இஸ்பானிய மக்கள், இயல்பிலே அன்பான வரவேற்பு பண்பையும், மற்ற மதங்கள்மீது எப்போதும் மிகுந்த மரியாதையையும் கொண்டிருப்பவர்கள் என்று தெரிவித்த பேராயர் மச்சாடோ அவர்கள், நாம் நம்பிக்கையை இழந்துவிடாமல், இறைவன் வழங்கும் அமைதி எனும் கொடையைத் தடையின்றி பெற்று, அதை இம்மண்ணில் நிலைநாட்ட வேண்டுமென்று கூறினார்.  

ஆகஸ்ட் 13ம் தேதியன்று மும்பையில் நடைபெற்ற, உலக அமைதி மற்றும் நல்லிணக்க அவையில் கலந்துகொண்டுள்ள பேராயர் மச்சாடோ அவர்கள், அந்த அவையில் கலந்துகொண்ட பல்சமயத் தலைவர்கள் பற்றியும், அமைதியை நிலைநாட்ட முயற்சிகள் எடுக்கப்படவேண்டியதன் முக்கியத்துவம் பற்றியும் ஆசியச் செய்தியிடம் பகிர்ந்துகொண்டார்.

பார்சலோனா தாக்குதலில், சீனா, பாகிஸ்தான், பிலிப்பீன்ஸ், ஹாங்காங், தாய்வான் உட்பட, இருபது நாடுகளைச் சேர்ந்த மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.  

ஆதாரம் : AsiaNews / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.