2017-08-19 16:37:00

வியட்னாம் அரசு, சமய சுதந்திரத்தை மதிக்க வேண்டும்


ஆக.19,2017. வியட்னாம் கம்யூனிச அரசு, சமய சுதந்திரத்தை மதிக்க வேண்டுமென்று கேட்டுக்கொண்டுள்ளார், வியட்னாமின் திருப்பீடப் பிரதிநிதி பேராயர் லெயோபோல்தோ ஜிரெல்லி.

வியட்னாமில் மறைப்பணியாற்றும் கத்தோலிக்கத் திருஅவை, நாட்டிற்குப் பிரச்சனையாக இல்லாமல், நாட்டின் பொதுநலனுக்கு நன்மைகளையே ஆற்றிவருகின்றது என்று கூறிய பேராயர் ஜிரெல்லி அவர்கள், வியட்னாம் அரசு, சமய சுதந்திரத்தை மதிக்க வேண்டுமென்று வலியுறுத்தினார்.

வியட்னாமின் La Vang  அன்னை மரியா தேசிய திருத்தலத்தில் திருப்பலி நிறைவேற்றி, மறையுரையாற்றிய பேராயர் ஜிரெல்லி அவர்கள், நாம் மனிதர்க்குப் பணிவதைவிட கடவுளுக்குப் பணிய வேண்டும் என்பதை வலியுறுத்திப் பேசினார்.

திருப்பீடத்திற்கும், வியட்னாமுக்கும் இடையே உரையாடல்களில் முன்னேற்றம் காணப்பட்டாலும், அரசுக்கும், தலத்திருஅவைக்கும் இடையே சில பதட்டநிலைகள் தொடர்ந்து இருந்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

தென்கிழக்கு ஆசிய நாடாகிய வியட்னாமின் 9 கோடியே 10 இலட்சம் மக்களில், 60 இலட்சம் பேர் கத்தோலிக்கர். உலகில் கம்யூனிச நாடுகள் என அதிகாரப்பூர்வமாக அறிக்கையிட்டுள்ள ஐந்து நாடுகளில் வியட்னாமும் ஒன்றாகும்.

சீனா, வட கொரியா, லாவோஸ், கியூபா ஆகிய நாடுகளும் கம்யூனிச நாடுகளாகும்.

ஆதாரம் : UCAN / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.