2017-08-21 16:28:00

இறைவன் கைவிடுவதில்லை, விசுவாசம் உறுதிப்படவே உதவுகிறார்


ஆக.,21,2017. நம் வாழ்வின் சில துன்பகரமான வேளைகளில் நம் விண்ணப்பத்திற்கு இறைவன் செவிமடுக்காததுபோல் தோன்றினாலும், விவிலியம் எடுத்துரைக்கும் கானானியப் பெண்ணைப்போல், நாம் நம் விசுவாசத்தில் உறுதியுள்ளவர்களாகச் செயல்படவேண்டும் என தன் மூவேளை செப உரையில் அழைப்புவிடுத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இஞ்ஞாயிறு நற்செய்தி வாசகம் எடுத்துரைத்த கானானியப் பெண் குறித்து, ஞாயிறு நண்பகல் மூவேளை செப உரை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன் மகளின் குணம் வேண்டி இயேசுவை அணுகிய இந்த கானானியப் பெண்ணின் விண்ணப்பத்தை இயேசு செவிமடுக்கவில்லைபோல் தோன்றினாலும், தன் மகள் மீது கொண்ட அன்பாலும், இயேசுவின் மீதுள்ள நம்பிக்கையாலும், விடாமல் முயற்சி செய்த இப்பெண், நம் விசுவாச வாழ்வுக்கு நல்லதொரு எடுத்துக்காட்டாக உள்ளார் என்றார்.

அன்பு, விசுவாசத்தை முன்னோக்கி எடுத்துச்செல்லும் அதேவேளை, விசுவாசம், அன்பின் கொடையாக மாறுகிறது எனவும் எடுத்துரைத்தார் திருத்தந்தை.

தன் மகள் மீது கொண்ட அன்பாலும் இயேசுவின் மீது வைத்திருந்த நம்பிக்கையாலும், விடாமுயற்சியுடன் செயல்பட்ட கானானியப் பெண்ணிற்கு, அவர் கேட்டதை இயேசு வழங்கியதுடன், அவரின் விசுவாசத்தையும் அவர் புகழந்தார் என்ற திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இறைவன் சிலவேளைகளில் பாராமுகமாய் இருப்பதுபோல் தோன்றுவது, நம்மைக் குறித்த அக்கறையின்மையால் அல்ல, மாறாக, நம்மை விசுவாசத்தில் உறுதிப்படுத்தவே என்றார்.

நாம் விசுவாசத்தில் வளர்ந்து உறுதிப்படுத்தப்படவேண்டும் என்பதையும், துன்பகரமான வேளைகளில் இறைவன் நமக்கு உதவ எப்போதும் தயாராக இருப்பார் என்பதையும் கானானியப் பெண்ணோடு தொடர்புடைய இந்நிகழ்வு நமக்கு சொல்லித் தருகிறது என மேலும் கூறினார், திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.