2017-08-24 15:28:00

அடிமைத்தனத்தை அகற்ற கண்களைத் திறக்க வேண்டும்


ஆக.24,2017. அடிமை வர்த்தகத்தின் அழிவை நினைவுகூரும் உலக நாள், வெறும் நினைவு நாள் மட்டுமல்ல, இன்றும் அடிமை வர்த்தகத்தின் பல வடிவங்களை ஒழிப்பதற்கு அழைப்பு விடுக்கும் நாள் என்று, வத்திக்கான் உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.

ஆகஸ்ட் 23, இப்புதனன்று கடைப்பிடிக்கப்பட்ட உலக நாளையொட்டி, ஒருங்கிணைந்த மனித முன்னேற்ற திருப்பீட அவையின் நேரடிச் செயலர், அருள்பணி மைக்கில் செர்னி (Michael Czerny) அவர்கள், வத்திக்கான் வானொலிக்கு அளித்த பேட்டியில் இவ்வாறு கூறினார்.

மனித வர்த்தகம் மற்றும் நவீன அடிமைத்தனம் வெவ்வேறு வடிவங்களில் இவ்வுலகில் உள்ளன என்பதைச் சுட்டிக்காட்டிய அருள்பணி செர்னி அவர்கள், ஆப்ரிக்கா, ஐரோப்பா, அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கிடையே நிலவும் சமநிலையற்ற உறவுகள், இந்தப் பிரச்சனையை பெரிதும் வளர்க்கின்றன என்று எடுத்துரைத்தார்.

ஆகஸ்ட் 23, இப்புதனன்று திருத்தந்தை வெளியிட்ட டுவிட்டர் செய்தி வழியாகவும், இன்னும் பல வழிகளிலும், நவீன அடிமைத்தனத்தை நோக்கி நம் கவனத்தைத் திருப்பி வருகிறார் என்று அருள்பணி செர்னி அவர்கள் தன் பேட்டியில் சுட்டிக்காட்டினார்.

வெளிப்படையாகத் தெரியாமல் உலகெங்கும் நிலவிவரும் அடிமைத்தனத்தின் விளைவுகளைக் காண, நாம் கண்களையும், உள்ளத்தையும் திறக்க வேண்டும் என்று அருள்பணி செர்னி அவர்கள் தன் பேட்டியில் குறிப்பிட்டார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.