2017-08-24 15:36:00

இனவெறி, அமெரிக்காவில் வேரூன்றியிருக்கும் பாவம்


ஆக.24,2017. இனவெறிக்கு எதிரான பணிகளை ஆற்ற அமெரிக்க ஐக்கிய நாட்டு ஆயர் பேரவை, இப்புதனன்று, ஒரு பணிக்குழுவை உருவாக்கியுள்ளது.

இந்த ஆயர் பேரவையின் தலைவரான, கர்தினால் டேனியல் டி'னார்டோ (Daniel N. DiNardo) அவர்களால் முன்மொழியப்பட்டு, பேரவையால் ஏற்றுக்கொள்ளப்பட்ட இந்த பணிக்குழு, அமெரிக்க ஐக்கிய நாட்டு சமுதாயத்தில் வேரூன்றியிருக்கும் இனவெறியை ஒழிப்பதற்கு முயற்சிகள் மேற்கொள்ளும் என்று பேரவை அறிக்கையொன்று கூறுகிறது.

இனவெறிக்கு எதிரான பணிக்குழுவின் தலைவராக, ஒஹையோ மாநிலத்தின் யங்ஸ்டவுன் (Youngstown) மறைமாவட்ட ஆயர் George Murry அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்.

நீண்ட காலமாக அமெரிக்க ஐக்கிய நாட்டு மக்களை துன்புறுத்திவரும் இனவெறி என்ற பாவத்திலிருந்து முழுமையான விடுதலை பெற, ஆயர்களும், மக்களும் இணைந்து உழைக்கவேண்டும் என்று, இயேசு சபையைச் சேர்ந்த ஆயர், Murry அவர்கள் செய்தியாளர்களிடம் கூறினார்.

மனித குடும்பத்தை சிதைக்கும், இனவெறி ஒரு பாவம் என்று, 40 ஆண்டுகளுக்கு முன்னரே அமெரிக்க ஆயர்கள் தங்கள் அறிக்கை வழியே தெளிவாகக் கூறியிருப்பினும், இந்த பாவத்திலிருந்து அமெரிக்க ஐக்கிய நாடு இன்னும் விடுதலை பெறவில்லை என்று ஆயர் பேரவைத் தலைவர், கர்தினால் டி'னார்டோ அவர்கள் கூறினார்.

ஆதாரம் : USCCB / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.