2017-08-28 16:12:00

மனிதர்கள் எனும் சிறுகற்களால் கட்டப்படும் திருஅவை


ஆக.28,2017. என்னை யார் என நீங்கள் சொல்கிறீர்கள் என இயேசு கேட்டதையும், அதற்கு, சீமோன் பேதுரு வழங்கிய மறுமொழியையும் கொண்டு இஞ்ஞாயிறு நண்பகல் மூவேளை செப உரையை வழங்கினார், திருத்தந்தை பிரான்சிஸ்.

இஞ்ஞாயிறு திருப்பலி வாசகத்தில் இடம்பெறும் இப்பகுதியில், சீமோன் பேதுரு, இயேசுவை நோக்கி, 'நீரே வாழும் கடவுளின் மகன்' என கூறியதையும், அதற்கு, இயேசு அளித்த பதிலையும் எடுத்துரைத்து உரை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், புனித பேதுருவின் மீது திருஅவையைக் கட்டுவதாக உரைத்த இயேசு, இன்றும் திருஅவையை கட்டியெழுப்பிக் கொண்டேயிருக்கிறார், திருஅவையின் புதுப்பித்தல் பணி எக்காலத்திலும் தேவைப்பட்டுக்கொண்டேயிருக்கிறது என்று கூறினார்.

திருஅவையைக் கட்டியெழுப்புவதில், ஒவ்வொருவரின் பங்களிப்பும் வித்தியாசமானதாக இருப்பினும், ஒவ்வொருவரும் அங்கு முக்கியமானவர்கள் என்பதையும் வலியுறுத்திய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், திருஅவையைக் கட்டியெழுப்ப உதவும் மனிதர்களாகிய ஒவ்வொருவரும், இயேசுவின் கைகளில் விலைமதிப்பற்ற கற்களாக, கட்டிடம் கட்ட உதவுகின்றனர், என்றார்.

சிறிய கற்களாக இருக்கும் நாம், இயேசுவால் தேர்ந்தெடுக்கப்பட்டு, உயிருள்ள கற்களாக மாற்றம்பெற்று, திருஅவையின் கட்டுமானப் பணிகளில் பங்கெடுக்கிறோம் என்ற திருத்தந்தை, புனித பேதுருவும் பெரிய பாறை அல்ல, மாறாக, இயேசு அவரைத் தேர்ந்தெடுத்து, ஒன்றிப்பின் மையமாக மாற்றினார் என்றார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.