2017-09-04 16:41:00

பெருமழையால் பாதிக்கப்பட்டோரின் அருகாமையில் திருத்தந்தை


செப்.04,2017. தெற்கு ஆசியாவிலும், அமெரிக்காவின் டெக்சஸ் மாநிலத்திலும் பெருமழையால் பாதிக்கப்படுள்ள மக்களுடன் தன் ஆன்மீக நெருக்கத்தை வெளியிடுவதாக, தன் மூவேளை செப உரையின் இறுதியில் தெரிவித்தார், திருத்தந்தை பிரான்சிஸ்.

வெள்ளப் பெருக்கின் பாதிப்புகளால் இன்னும் துன்பங்களை அனுபவித்துவரும் தென் ஆசிய மக்களோடு ஆன்மீக நெருக்கத்தை வெளியிடும் அதேவேளை, பெருமெண்ணிக்கையில் குடிபெயரவும், பொருள் சேதத்திற்கும் காரணமாகியுள்ள டெக்சஸ் மாநில சுறாவளி மற்றும் வெள்ளப்பெருக்கினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களோடு தன் உயிர்துடிப்புள்ள பங்கேற்பை வெளியிடுவதாகவும் தெரிவித்துள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

தென் ஆசியாவில் பெய்த பெருமழையால், இந்தியா, பங்களாதேஷ், நேபாளம் ஆகிய நாடுகளில், 4 கோடியே 10 இலட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிழந்துள்ளனர்.

இஞ்ஞாயிறு மூவேளை செப உரையின் இறுதியில், இவ்வாரத்தில், தான் கொலம்பியா நாட்டிற்கு பயணம் மேற்கொள்ளவுள்ளதையொட்டி வாழ்த்துக்கூறிய அனைவருக்கும் நன்றிகூறுவதாகவும் தெரிவித்தார், திருத்தந்தை.

வரும் புதன் கிழமை, செப்டம்பர் 6ம் தேதியிலிருந்து, 11ம் தேதிவரை திருத்தந்தையின் கொலம்பியா நாட்டு திருத்தூதுப்பயணம் இடம்பெறுகிறது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.