2017-09-07 14:48:00

பாசமுள்ள பார்வையில்......... நாம் எவ்வழியோ மக்களும் அவ்வழியே


அது ஓர் அழகிய நகரம். அந்த நகரத்தின்  நுழைவு வாயிலில் எப்போதும் ஒரு வயதான தாய் அமர்ந்து, வருவோர் போவோரை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருப்பார். ஒரு நாள் இளைஞர் ஒருவர், நகரத்தின் வாயிலை நோக்கி குதிரையில் வந்துகொண்டிருந்தார்.

அப்போது அங்கிருந்த வயதான தாயிடம் "அம்மா, இந்த ஊர் மக்கள் எப்படி? நான் முன்னாடி இருந்த ஊர் ரொம்ப மோசம். எதுக்கெடுத்தாலும் சண்டைக்கு வருவாங்க. ஒருத்தரைப் பத்தி ஒருத்தர் தப்பா பேசிக்கிட்டும் திட்டிக்கிட்டும் இருப்பாங்க. எப்படா அந்த ஊரைவிட்டு வருவோம்னு இருந்தது. அதான் கேட்கிறேன், இந்த ஊர் எப்படி?" என்று கேட்டார்.

''நீ வேற தம்பி, இந்த ஊர் உனது ஊரைவிட ரொம்ப மோசம். போட்டி, பொறாமை, சாதிச் சண்டை, கலவரம்னு ஏதாவது ஒரு பிரச்சனை இருந்துக்கிட்டே இருக்கும். நீயே நிம்மதியைத் தேடி வர்ற, உனக்கு இந்த ஊரு சரிப்படாது தம்பி" என்று கூறி அந்த இளைஞரை வெளியே வழியனுப்பி வைத்தார், அந்த வயதான தாய். சிறிது நேரம் கடந்து, அவ்வழியாக வந்த வேறோர் ஆள், அந்த மூதாட்டியிடம் அதே கேள்வியைக் கேட்டார்.

"அம்மா, இந்த ஊரில் தங்கி வியாபாரம் பண்ணலாம்ன்னு இருக்கேன். இந்த ஊர் மக்கள் எப்படி?"

" உங்க ஊர்லயே வியாபாரம் பண்ணலாம்ல?  ஏன் இந்த ஊருக்கு வர்ற? " என்றார் அத்தாய்.

"எங்க ஊர் மாதிரி வராதுங்க.. அந்த ஊர் மக்கள் ரொம்பப் பாசக்காரங்க. என் குடும்பம் இப்போ வறுமையில இருக்கு. சம்பாதிக்கத்தான் இந்த ஊருக்கு வந்தேன். நல்லா சம்பாதிச்சிட்டு மறுபடியும் அங்கேயே போயிடுவேன்" என்று கண் கலங்கியபடியே கூறினார்.

"அழாதே தம்பி, இந்த ஊர் மக்களும் ரொம்ப நல்லவங்க. தைரியமா நீ வியாபாரம் பண்ணலாம்" என்று கூறி அவரை ஊருக்குள் வரவேற்றார் அத்தாய்.

அந்த அம்மாவின் அருகில் இருந்து, இந்த இரண்டு சம்பவங்களையும் கவனித்துக் கொண்டிருந்த ஒருவர், உடனே அவரிடம், "முதலில் வந்தவர்கிட்ட இந்த ஊர் பொல்லாததுன்னு சொன்னீங்க, இவர்கிட்ட மட்டும் நல்ல ஊர்ன்னு சொல்லுறீங்களே ஏன்?" என்று சந்தேகத்துடன் கேட்டார்.

அனுபவங்கள் பல கண்ட அத்தாய் அவரிடம், "இந்த உலகம் கண்ணாடி மாதிரி. நாம எப்படி இருக்கிறோமோ, அப்படித்தான் கண்ணாடி நம்மைக் காட்டும்'' என்றார்.

ஆதாரம் :  வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.