2017-09-19 17:18:00

கடத்திச் செல்லப்பட்ட பிலிப்பீன்ஸ் அருள்பணியாளர் விடுதலை


செப்.19,2017. இவ்வாண்டு மே மாதம் 23ம் தேதி பிலிப்பீன்ஸ் நாட்டின் மராவி நகரிலிருந்து இஸ்லாமிய தீவிரவாதிகளால் கடத்திச் செல்லப்பட்ட அருள்பணி Teresito Chito Suganob அவர்கள், இராணுவ உதவியுடன் விடுதலைச் செய்யப்பட்டுள்ளார்.

மராவி மறைமாவட்டத்தின் முதன்மைக் குருவாகச் செயல்பட்டுவந்த அருள்பணி Chito அவர்கள், Bato எனுமிடத்திலுள்ள மசூதியிலிருந்து இராணுவத்தால் விடுவிக்கப்பட்டுள்ளார்.

இம்மசூதியை சுற்றிவளைத்த பிலிப்பீன்ஸ் இராணுவம், அதற்குள் பதுங்கியிருந்த இஸ்லாமிய தீவிரவாதிகளுடன் நடத்திய ஐந்து மணி நேர சண்டைக்குப்பின், அருள்பணியாளரை உயிருடன் மீட்டுள்ளது.

அரசு இராணுவத்திற்கும், புரட்சியாளர்க்கும் இடையே கடந்த 4 மாதங்களாக மராவி பகுதியில் இடம்பெற்றுவரும் தீவிர மோதல்களில், அந்நகர் முற்றிலுமாக மீண்டும் கட்டியெழுப்பப்பட வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது என செய்தி நிறுவனங்கள் தெரிவிக்கின்றன.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.