செப்.20,2017. ஜப்பான், கொரியா ஆகிய இரு நாடுகளிலும், கத்தோலிக்க மறையின் ஆரம்ப காலம் இரத்தத்தில் தோய்ந்திருந்தது என்று, நற்செய்தி அறிவிப்புப்பணி பேராயத்தின் தலைவர், கர்தினால் பெர்னாண்டோ ஃபிலோனி அவர்கள், செப்டம்பர் 20, இப்புதனன்று வழங்கிய மறையுரையில் கூறினார்.
கர்தினால் ஃபிலோனி அவர்கள், ஜப்பான் நாட்டில் மேற்கொண்டுள்ள மேய்ப்புப்பணி பயணத்தின் ஒரு நிகழ்வாக, இப்புதனன்று ஹிரோஷிமா பேராலயத்தில், கொரிய மறைசாட்சிகளின் திருநாள் திருப்பலியை நிறைவேற்றுகையில், இவ்வாறு மறையுரை வழங்கினார்.
நற்செய்தியைப் பரப்பும் பணி, கொள்கை திணிப்பு செயல் அல்ல, கட்டாய மனமாற்றம் அல்ல, மாறாக, அன்பின் அடிப்படையில் மக்களை இறைவனின் குடும்பத்தில் இணைக்கும் பணி என்று கர்தினால் பிலோனி அவர்கள் தன் மறையுரையில் வலியுறுத்திக் கூறினார்.
இப்புதனன்று கொண்டாடப்பட்ட புனித ஆண்ட்ரு கிம், தன் மறைசாட்சிய மரணத்திற்கு முன்னதாக எழுதிய மடலிலிருந்து ஒரு சில எண்ணங்களை பகிர்ந்துகொண்ட கர்தினால் ஃபிலோனி அவர்கள், கிறிஸ்து இவ்வுலகின் சக்திகள் அனைத்தையும் வெற்றிபெற்றுள்ளார் என்பதால், நாம் தொடர்ந்து நம்பிக்கையோடு போராடுவோம் என்று புனித கிம் கூறிய சொற்களுடன், தன் மறையுரையை நிறைவு செய்தார்.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
All the contents on this site are copyrighted ©. |