2017-09-26 11:08:00

பாசமுள்ள பார்வையில் - "இன்னும் ஒரு 5 நிமிடங்கள், ப்ளீஸ்..."


இளம் தந்தையொருவர், 5 வயது மகன், ஹென்றியை அழைத்துக்கொண்டு, தன் வீட்டுக்கு முன்புறம் அமைந்திருந்த பூங்காவுக்குச் சென்றார். அங்கு, ஹென்றி ஊஞ்சலில் விளையாடிக்கொண்டிருந்ததை, அருகிலிருந்த 'பெஞ்சில்' அமர்ந்து இரசித்துக் கொண்டிருந்தார் தந்தை. அவர் அருகே மற்றொரு இளம் தாய் வந்தமர்ந்தார். சிறிது நேர அமைதிக்குப் பின், அப்பெண், "சிவப்பு சட்டை போட்டு ஊஞ்சலில் ஆடிக்கொண்டிருப்பவன் என் மகன்" என்று பேச்சுக்கொடுக்க ஆரம்பித்தார். இளம் தந்தை, "அப்படியா? அவனுக்கருகே அடுத்த ஊஞ்சலில் ஆடிக்கொண்டிருப்பவன் என் மகன்" என்று கூறினார். அரைமணி நேரம் இருவரும் பல விடயங்கள் குறித்துப் பேசினர். பின்னர், இளம் தந்தை எழுந்து, தன் கைக்கடிகாரத்தைப் பார்த்தவண்ணம், தன் மகனிடம், "ஹென்றி, வா போகலாம்" என்று கூற, சிறுவன் அவரிடம், "இன்னும் ஒரு 5 நிமிடங்கள் அப்பா" என்று கெஞ்சினான். 5 நிமிடங்கள் சென்று, தந்தை மீண்டும் அழைக்க, ஹென்றி மீண்டும், "ப்ளீஸ் அப்பா. இன்னும் ஐந்தே நிமிடங்கள்" என்று கூறினான். இவ்வாறு, நான்கு, அல்லது, ஐந்து முறை நடந்தது.

இதைப்பார்த்துக்கொண்டிருந்த அந்த இளம் தாய், "நீங்கள் உண்மையிலேயே ரொம்ப பொறுமைசாலி" என்று புகழ்ந்தார். அந்த இளம் தந்தை, அப்பெண்ணிடம், "என் மகன் கேட்கும் ஐந்து நிமிடங்கள் அவனுக்காக மட்டுமல்ல, எனக்காகவும்தான்" என்று கூறியதும், அப்பெண் புரியாமல் அவரைப் பார்த்தார். இளம் தந்தை, தொடர்ந்து விளக்கம் அளித்தார்: "ஹென்றியின் அண்ணன் ஜூலியன், சென்ற ஆண்டு, இதே பூங்காவுக்கருகே, சாலை விபத்தில் இறந்தான். எங்கள் வீடு, பூங்காவுக்கு எதிரே இருப்பதால், என் மகன் ஜூலியன், பூங்காவில் சைக்கிள் ஓட்ட விரும்பி, என்னையும் அழைத்தான். ஆனால், நான் அப்போது வேலையில் மூழ்கியிருந்ததால், அவனோடு செல்ல மறுத்துவிட்டேன். ஜூலியன் வீட்டைவிட்டு, பூங்காவிற்குச் செல்ல, சைக்கிளில் சாலையைக் கடந்தபோது, குடிபோதையில் கார் ஒட்டி வந்த ஒருவர், ஜூலியன் மீது மோதியதால், வீட்டுக்கெதிரிலேயே அவன் இறந்துபோனான். என் மகன் ஜூலியன் என்னிடம் கேட்டதெல்லாம் ஒரு ஐந்து நிமிடங்கள்தாம். அதை அவனுக்கு அன்று நான் கொடுத்திருந்தால், அவன் ஒருவேளை இன்று உயிரோடு இருந்திருப்பான். இப்போது, ஹென்றி கேட்கும் ஐந்து நிமிடங்கள், அவனுக்காக மட்டுமல்ல, எனக்காகவும் தான். இந்தப் பூங்காவில் நான் அமரும் நிமிடங்கள் எல்லாம், என் ஜூலியனுக்காக நான் செலவிடும் நிமிடங்கள்" என்று அந்த இளம் தந்தை, கலங்கிய கண்களுடன் கூறி முடித்தார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.