2017-09-27 16:47:00

காணாமல்போன 70 ஆயிரம் குழந்தைகள் மீட்பு


செப்.27,2017. இந்தியாவில் மத்திய அரசின், 'ஆபரேஷன் ஸ்மைல் (Operation Smile)’ என்ற திட்டத்தால், காணாமல்போன, எழுபதாயிரத்திற்கு மேற்பட்ட குழந்தைகள், மீட்கப்பட்டுள்ளனர் என, மத்திய உள்துறை அமைச்சர், ராஜ்நாத் சிங் அவர்கள் தெரிவித்தார்.

டில்லியில், இத்திங்களன்று நடந்த குழந்தைத் தொழிலாளர் தொடர்பான கருத்தரங்கில் பங்கேற்ற, மத்திய உள்துறை அமைச்சரான ராஜ்நாத் சிங் பேசியபோது, காணாமல் போன குழந்தைகளை மீட்பதற்காக, 2015ம் ஆண்டில், 'ஆபரேஷன் ஸ்மைல்' என்ற திட்டத்தை அறிமுகம் செய்தோம், இதுவரை, எழுபதாயிரத்திற்கு மேற்பட்ட குழந்தைகள் மீட்கப்பட்டு உள்ளனர் என்று கூறினார்.

குழந்தைத் தொழிலாளர் முறையை முழுமையாக ஒழிக்க தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன என்றும், 2022ம் ஆண்டில், நாட்டில் குழந்தைத் தொழிலாளர் முறை இல்லாத நிலை உருவாக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

குழந்தைத் தொழிலாளர் முறையை ஒழிக்கும் வகையில், குழந்தைத் தொழிலாளர்களை அடையாளம் கண்டு, அவர்களுக்கு மறுவாழ்வு அளிக்கும் திட்டங்களை ஒருங்கிணைக்கும், 'பென்சில் (PENCIL)’ என்ற புதிய இணையதளத்தை, ராஜ்நாத் சிங் அவர்கள், இந்நிகழ்வில் அறிமுகம் செய்து வைத்தார்.

ஆதாரம் : தினமலர் /வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.