2017-09-27 16:09:00

புலம்பெயர்வோரைத் திறந்த கரங்களுடன் வரவேற்க அழைப்பு


செப்.27,2017. புலம்பெயர்வோரைத் திறந்த கரங்களுடன் வரவேற்று, அவர்களின் நெருக்கடியான வாழ்வைப் பகிர்ந்துகொள்ளுமாறு, அரசுகளுக்கும், நன்மனம் கொண்ட அனைத்து மனிதருக்கும் அழைப்பு விடுத்துள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

இப்புதன் காலையில், வத்திக்கான் தூய பேதுரு வளாகத்தில் நடைபெற்ற பொது மறைக்கல்வியுரையில் கலந்துகொண்ட பல்லாயிரக்கணக்கான திருப்பயணிகளுக்கு உரையாற்றியபோது, உலகளாவிய காரித்தாஸ் நிறுவனம் ஆரம்பித்துள்ள, புலம்பெயர்வோர் மற்றும், குடிபெயர்வோர் குறித்த ஈராண்டு திட்டத்தைத் தொடங்கி வைத்து, இவ்வாறு அழைப்பு விடுத்தார், திருத்தந்தை பிரான்சிஸ்.

புலம்பெயர்வோர் மற்றும், குடிபெயர்வோர்க்கு ஆதரவாக, “பயணத்தைப் பகிர்வோம்” என்ற தலைப்பில், உலகளாவிய காரித்தாஸ் நிறுவனம் ஆரம்பித்துள்ள இந்நடவடிக்கை குறித்து உரையாற்றிய திருத்தந்தை, சகோதரர்களே, இயேசு செய்தது போன்று, இம்மக்களின் பயணத்தைப் பகிர்ந்துகொள்ள அஞ்ச வேண்டாம், நம்பிக்கையைப் பகிர்ந்துகொள்ள அஞ்ச வேண்டாம் என்று கேட்டுக்கொண்டார்.

புலம்பெயர்வோர் மற்றும், குடிபெயர்வோர் மீதுள்ள முற்சார்பு எண்ணங்களை, சகிப்புத்தன்மையால் அகற்ற வேண்டும் என்றும் திருத்தந்தை கூறினார்.

மேலும், இப்புதனன்று தன் டுவிட்டர் பக்கத்தில், “புலம்பெயர்வோர் மற்றும் குடிபெயர்வோரின் பயணத்தை, அச்சமின்றி நாம் பகிர்ந்துகொள்வோம்” என்று, கேட்டுக்கொண்டுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.