2017-10-03 11:48:00

பாசமுள்ள பார்வையில்- இறைவனின் சமாதானம் உங்களுக்கு உரித்தாகுக


கிறிஸ்தவருக்கும், இஸ்லாமியருக்கும் இடையே, பகைமை உணர்வுகள் கொழுந்துவிட்டு எரிந்துகொண்டிருந்த 13ம் நூற்றாண்டில் வாழ்ந்த அசிசி நகர் புனித பிரான்சிஸ், தன்னால் இயன்ற அளவு, இந்தப் பகைமைத் தீயைத் தணிக்க முயன்றார்.

1219ம் ஆண்டு, எகிப்தில் வாழும் இஸ்லாமியர் மீது கிறிஸ்தவர் மேற்கொண்ட போர், திருத்தந்தையின் ஆசீரோடு நிகழ்ந்து வந்தது. இதையறிந்து வெகுண்டெழுந்த எகிப்திய சுல்தான், மாலிக்-அல்-கமில் (Malik-al-Kamil) அவர்கள், கிறிஸ்தவர்களின் தலைகளைக் கொண்டு வருவோருக்கு, தங்க நாணயங்கள் வழங்கப்படும் என்று அறிவித்திருந்தார்.

நைல் நதிக்கரையோரம் திரண்டிருந்த கிறிஸ்தவ வீரர்களுக்குத் தலைமை வகித்த கர்தினால் பெலாஜியுஸ் (Pelagius) அவர்களிடம், போரைக் கைவிடுமாறு சகோதரர் பிரான்சிஸ் அவர்கள் மன்றாடினார். பெலாஜியுஸ் அவர்கள் மறுக்கவே, போர்க்களத்தின் மறுமுனையில் இருந்த சுல்தானைச் சந்திக்கச் சென்றார், பிரான்சிஸ்.

அவர் பகைவரின் உளவாளி என்று எண்ணிய இஸ்லாமிய வீரர்கள், அவரை அடித்து, துன்புறுத்தி, சுல்தான் முன் கொண்டு சென்றனர். சகோதரர் பிரான்சிஸ், சுல்தானைக் கண்டதும், தான் வழக்கமாகக் கூறும், "இறைவனின் சமாதானம் உங்களுக்கு உரித்தாகுக" என்று வாழ்த்தைக் கூறினார். இதைக் கேட்ட சுல்தான், அந்த வாழ்த்து, இஸ்லாமியர் பயன்படுத்தும் வாழ்த்தை ஓத்திருந்ததைக் கண்டு, ஆனந்த அதிர்ச்சியடைந்தார்.

சுல்தானுக்கும், சகோதரர் பிரான்சிஸ் அவர்களுக்கும் இடையே நிகழ்ந்த அந்த அழகான சந்திப்பின் இறுதியில், சுல்தான், அவருக்கு அளித்த பல பரிசுகளை அவர் நிராகரித்தார். இஸ்லாமியரை, தொழுகைக்கு அழைப்பதற்கென பயன்படுத்தப்படும் ஒரு ஊதுகுழலை மட்டும் தன்னுடன் எடுத்துச்சென்றார், பிரான்சிஸ். அன்று முதல், மக்களை வழிபாட்டிற்கு அழைப்பதற்கு அவர் அந்த ஊதுகுழலையே பயன்படுத்தினார்.

அன்றைய திருஅவை, இஸ்லாமியர் மீது காட்டிவந்த பகைமையுணர்வைப் பற்றி சிறிதும் கவலைப்படாமல், சகோதரர் பிரான்சிஸ், தன் துறவு சபையினருக்கு, ஒரு புதிய சட்டத்தைக் கொணர்ந்தார். பிரான்சிஸ்கன் துறவியர், இஸ்லாமியரோடு நல்லுறவை வளர்ப்பதில் அதிக அக்கறை காட்டவேண்டும் என்பதை ஒரு சட்டமாகப் புகுத்தினார், பிரான்சிஸ்.

ஒரு சில இஸ்லாமியரின் தவறான போக்குகளால், உலகெங்கிலும் வாழும் இஸ்லாமியரை சரிவரப் புரிந்துகொள்ளமுடியாமல் தவிக்கும் நம் உலகை, அமைதியின் தூதனாக வாழ்ந்த அசிசி நகர் புனித பிரான்சிஸ், அன்புப் பாதையில் வழிநடத்திச் செல்லட்டும். இப்புனிதரின் திருநாள், அக்டோபர் 4ம் தேதி சிறப்பிக்கப்படுகிறது

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.