2017-10-03 16:21:00

புதிய தொழில்நுட்பம் குறித்த வத்திக்கான் மாநாடு


அக்.03,2017. ‘டிஜிட்டல் உலகில் சிறார் மாண்பு’ என்ற தலைப்பில், உரோம் கிரகோரியன் பாப்பிறை பல்கலைக்கழகத்தில் நடைபெற்றுவரும் உலக மாநாட்டில், டிஜிட்டல் யுகத்தில், குறிப்பாக, மருத்துவத் துறையில் மனித மாண்பு குறித்து மிகுந்த கவனம் செலுத்தப்படுகின்றது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இம்மாநாடு குறித்து இத்திங்களன்று செய்தியாளர் கூட்டத்தில் விளக்கிய, பாப்பிறை மனித வாழ்வு கழகத்தின் சான்சிலர் பேரருள்திரு Renzo Pegoraro அவர்கள், புதிய தொழில்நுட்பத்தின் நன்மைகள், வரையறைகள் மற்றும், அவை திருஅவைக்குப் பயன்படும் வழிகள் பற்றி ஆராயப்படும் எனத் தெரிவித்தார்.

இத்திங்களன்று ஆரம்பித்துள்ள இந்த நான்கு நாள் மாநாட்டின் இறுதியில், இதில் கலந்துகொள்வோர், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களையும் சந்திப்பார்கள் எனவும்,  பேரருள்திரு Pegoraro அவர்கள் கூறினார்.

இணையதளம் வழியாக இடம்பெறும் உரிமை மீறல்கள் உலகளாவிய பிரச்சனையாக இருந்து வருகின்றது என்றும், பாலியல் வன்முறை, வலைத்தளம் வழியாக சிறாரின்   உரிமைகள் மீறப்படல் போன்ற விவகாரங்கள், குறைந்தது 75 நாடுகளில், இன்னும் பேசப்படவே இல்லை என்றும் கூறினார், பேரருள்திரு Pegoraro.

வருகிற வெள்ளியன்று நிறைவடையும் இம்மாநாட்டில், சீனா, இரஷ்யா, சவுதி அரேபியா, அரபு ஐக்கிய குடியரசு உட்பட பல நாடுகளிலிருந்து பிரதிநிதிகள் கலந்துகொள்கின்றனர்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.