2017-10-03 15:16:00

லாஸ் வேகாஸ் வன்முறையில் பலியானவர்களுக்கு திருத்தந்தை செபம்


அக்.03,2017. அமெரிக்க ஐக்கிய நாட்டின் லாஸ் வேகாஸ் நகரில் இடம்பெற்ற துப்பாக்கி சூடு வன்முறையில் பலியானவர்கள், காயமுற்றவர்கள், மற்றும் அவர்களின் குடும்பங்களுடன், தனது ஆன்மீக ஒருமைப்பாட்டுணர்வைத் தெரிவித்துள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

லாஸ் வேகாஸ் ஆயர், ஜோசப் அந்தோனி பெப்பே அவர்களுக்கு, திருப்பீடச் செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்கள், திருத்தந்தையின் பெயரால் அனுப்பியுள்ள தந்திச் செய்தியில், அறிவின்றி நடத்தப்பட்ட இவ்வன்முறையில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு, திருத்தந்தையின் செபமும், ஆறுதலும், ஒருமைப்பாட்டுணர்வும் தெரிவிக்கப்பட்டுள்ளன.

இவ்வன்முறை நடந்த இடத்தில் உடனடியாக அவசரகாலப் பணிகளையாற்றும் காவல்துறைக்கும், ஏனையப் பணியாளர்களுக்கும் திருத்தந்தையின் பாராட்டும், செபமும், ஊக்கமும், அச்செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளன.

லாஸ் வேகாஸ் ஆயர், பெப்பே அவர்களும், தனது வன்மையான கண்டனத்தையும், இதில் பாதிப்படைந்தவர்களுக்கு, தனது ஆறுதலையும், செபத்தையும் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க ஐக்கிய நாட்டின் கேளிக்கை நகரான லாஸ் வேகாசில், சிறப்பிக்கப்பட்ட மூன்று நாள் அறுவடை திருவிழாவின் நிறைவு நாளில் நடைபெற்ற இசை நிகழ்ச்சியின்போது, 64 வயது நிரம்பிய Stephen Paddock என்பவர் நடத்திய துப்பாக்கி சூட்டில், குறைந்தது ஐம்பது பேர் பலியாயினர், ஐந்நூறுக்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.

பிரபல நாட்டுப்புற பாடகர் ஜேசன் அல்டியன் குழுவினர், திறந்த வெளியில் இசைக் கச்சேரி நடத்திக்கொண்டிருந்தனர். இதை கண்டுகளிக்க ஆயிரக்கணக்கானோர் திரண்டு இருந்தனர். அப்போது Mandalay Bay விடுதியின் 32-வது மாடியிலிருந்து இசைத் திருவிழா நடந்த பகுதியை நோக்கி Paddock என்பவர் திடீரென துப்பாக்கியால் சரமாரியாக சுட்டார். நாலா திசையிலும் ஓடியவர்கள் மீதும் Paddock துப்பாக்கியால் தொடர்ந்து சுட்டுக்கொண்டே இருந்தார் என்று செய்திகள் கூறுகின்றன.

Paddockடம், 19 ஆயுதங்களும், அவரின் வீட்டில், மேலும் பல வெடிகுண்டுகளும் இருந்தன என்று, காவல்துறை கூறியுள்ளது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.