2017-10-04 16:09:00

எல்லாவித பயங்கரவாதங்களிலிருந்து கடவுள் உலகை காப்பாராக


அக்.04,2017. எகிப்து நாட்டையும், மத்திய கிழக்குப் பகுதியையும், இந்த உலகம் முழுவதையும், எல்லாவிதமான பயங்கரவாதத்திலிருந்தும், தீமைகளிலிருந்தும் இறைவன் பாதுகாப்பாராக என்று, இப்புதனன்று செபித்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

திருத்தந்தையின் இப்புதன் பொது மறைக்கல்வியுரையை, அரபு மொழியில் ஒருவர் வாசித்தபின், அரபு மொழி பேசுகின்றவர்களுக்கு, சிறப்பாக, திருக்குடும்பப் படத்துடன் இந்நிகழ்வில் கலந்துகொண்ட எகிப்து நாட்டுப் பிரதிநிதிகளுக்கு, தன் வாழ்த்தைத் தெரிவித்த திருத்தந்தை, இவ்வாறு செபித்தார்.

எகிப்துக்குத் திருத்தூதுப்பயணம் மேற்கொண்டதைக் குறிப்பிட்டுப் பேசிய திருத்தந்தை, இயேசு, மரி, யோசேப்பு ஆகியோரைக்கொண்ட திருக்குடும்பம் மற்றும் ஏராளமான இறைவாக்கினர்கள் வாழ்ந்துள்ள எகிப்து நாடு, நூற்றாண்டுகளாக மறைசாட்சிகளின் விலைமதிப்பில்லாத குருதியாலும், நீதிமான்களாலும் ஆசீர்வதிக்கப்பட்டுள்ள பூமி என்று கூறினார்.

இன்னும், அசிசி நகர் புனித பிரான்சிஸ் அவர்களைப் பின்பற்றி, படைப்புமீது அக்கறை காட்டுமாறு, எல்லாருக்கும், குறிப்பாக, இளையோருக்கு, இப்புதன் பொது மறைக்கல்வியுரையில் கேட்டுக்கொண்டார், திருத்தந்தை பிரான்சிஸ்.

அசிசி நகர் புனித பிரான்சிஸ் அவர்களின் விழாவாகிய, அக்டோபர் 04, இப்புதனன்று தன் டுவிட்டர் பக்கத்திலும், அசிசி நகர் புனித பிரான்சிஸ் போன்று, எளிமையிலும், மகிழ்விலும் வாழ்வதற்கு, கிறிஸ்துவின் அன்பால் நாம் உருமாற்றப்படுவோமாக என்று, செய்தி வெளியிட்டுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.