2017-10-04 16:25:00

பாசமுள்ள பார்வையில்…......., : அவர்களுக்கு சிரமம் எதற்கு?


அந்த வயதான மூதாட்டியைப் பார்க்க அவனுக்கு பாவமாக இருந்தது. சாலையின் மறுபக்கத்தில் எவ்வளவு நேரம்தான் காத்திருப்பார்கள்! எந்த வண்டியும் நிற்பதாகவும் இல்லை. இந்தப் பக்கத்திற்கு வருவதற்காக ஏறத்தாழ இருபது நிமிடங்களுக்கு மேல் தவித்துக் கொண்டிருந்தார் மூதாட்டி. மறுபக்கம் இருந்த கடையில் தேநீர் அருந்திக்கொண்டே இதைப் பார்த்துக் கொண்டிருந்த கேசவனுக்கு மனது வலித்தது. வாகனங்களை கைகாட்டி நிறுத்தி, மெதுவாக சாலையின் மறுபக்கம் சென்று அந்த பாட்டியை இந்தப் பக்கம் கூட்டி வந்தான். 'நீ மகராசனா, நல்லாயிருப்ப' என்றார் அந்த மூதாட்டி. இந்த ஆசீரே வாழ்க்கைக்கும் போதும் என்று மகிழ்ந்தான் கேசவன். அந்தப் பாட்டியிடம் மெதுவாகப் பேச்சுக் கொடுக்க ஆரம்பித்தான். ‘எங்க பாட்டி போறிங்க' என கேட்டான் கேசவன். ‘இல்லப்பா, இந்த ஊரில் இருக்கிற சாமிநாதன் என் பையன்தான். அவனையும், அவன் பிள்ளைகளையும் பார்த்துட்டுப் போகலாம்னு வந்தேன் என்றார் அந்த மூதாட்டி. 'ஏன் பாட்டி, இந்த தள்ளாத வயதில் பயணம் செய்து வரவேண்டுமா, அவர்கள் வந்து உங்களைப் பார்த்திருக்கலாமே' என்று கேசவன் கேட்க, 'ஐயோ, அது எப்படிப்பா முடியும்? என் பையனும் மருமகளும் வேலைக்குப் போகிறார்கள். இரு பிள்ளைகளும் பள்ளியில் படிக்கின்றனர். எல்லாரும் லீவு போட்டுவிட்டு என்னைப் பார்க்க வரமுடியுமா? நான்தான் அவனை வரவேண்டாம் என்று சொல்லியிருக்கிறேன். நான் ஒருத்தி கொஞ்சம் சிரமம் பார்க்காமல் வந்துவிட்டால் நாலுபேரையும் நானும் பார்த்துவிடலாம். அவர்கள் நாலுபேரும் என்னையும் பார்த்த மாதிரி ஆகும்’, என்றார் மூதாட்டி. பேரப்பிள்ளைகளைப் பார்க்கும் ஆசையில், இவ்வளவுதூரம் சிரமம் பார்க்காமல் பயணம் செய்தது மட்டுமல்ல, தன் மகனையும் மருமகளையும் விட்டுக்கொடுக்காமல் பேசியதையும் எண்ணிப் பெருமைப்பட்டான் கேசவன்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி            








All the contents on this site are copyrighted ©.