2017-10-06 15:59:00

உரோம் அறிக்கை : ‘டிஜிட்டல் உலகில் சிறார் மாண்பு’ மாநாடு


அக்.06,2017. உரோம் கிரகோரியன் பாப்பிறை பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற ‘டிஜிட்டல் உலகில் சிறார் மாண்பு’ என்ற உலக மாநாட்டின் இறுதியில் வெளியிடப்பட்ட அறிக்கையை, அப்பல்கலைக்கழகத்தின் அதிபர் இயேசு சபை அருள்பணி Nuno da Silva Gonçalves அவர்கள் திருத்தந்தையிடம் சமர்ப்பித்து, அவ்வறிக்கை பற்றியும், அந்த மாநாடு பற்றியும் விளக்கினார். இச்சந்திப்பில் ஓர் இளம்பெண்ணும் திருத்தந்தையிடம் தன் எண்ணங்களை எடுத்துச்சொன்னார்.  

அக்டோபர் 03, இச்செவ்வாய் முதல், அக்டோபர் 06, இவ்வெள்ளி வரை நடைபெற்ற இவ்வுலக மாநாடு பற்றி எடுத்துரைத்த அருள்பணி Gonçalves அவர்கள், ஒரு சமூகம், தன் குழந்தைகளை எவ்வாறு நடத்துகின்றதோ, அதை வைத்தே அச்சமூகம் கணிக்கப்படும் என்ற, திருத்தந்தையின் வார்த்தைகளை தாங்களும் நம்புவதாகத் தெரிவித்தார்.

ஒவ்வொரு குழந்தையும் மாண்புடனும், பாதுகாப்புடனும் வாழ்வதற்கு உரிமையைக் கொண்டுள்ளது எனினும், உலகில் இலட்சக்கணக்கான சிறார் தவறாகப் பயன்படுத்தப்படுகின்றனர் எனவும், நம் வாழ்வை பல நேர்மறை வழிகளில் மாற்றியிருக்கும் தொழில்நுட்பத்தில், சிறார் பயன்படுத்தப்பட்டுவருவது வளர்ந்து வருகின்றது எனவும் அவ்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

WePROTECT என்ற உலகளாவிய கூட்டமைப்பு மற்றும் சிறார் பாதுகாப்பு குறித்த ஐ.நா. அமைப்பின் உதவியுடன், உரோம் கிரகோரியன் பாப்பிறை பல்கலைக்கழகத்திலுள்ள சிறார் பாதுகாப்பு மையத்தில், சிறார் பாதுகாப்பிற்கு முக்கியமான பணிகள் ஆற்றப்பட்டு வருகின்றன எனவும் அவ்வறிக்கை கூறுகிறது.

WePROTECT கூட்டமைப்பில், 70 நாடுகள், 23 தொழில்நுடப் நிறுவனங்கள் மற்றும், பல்வேறு பன்னாட்டு நிறுவனங்கள் இணைந்துள்ளன.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.