2017-10-09 14:30:00

வாரம் ஓர் அலசல் – மனநலமே உடல்நலம்


அக்.09,2017. இன்று தமிழகத்தையே மிரட்டிக்கொண்டிருக்கும் ஒரு சொல் டெங்கு. டெங்கு காய்ச்சலுக்கு இந்த ஆண்டு 26 பேர் பலியாகியுள்ளதாகவும், 10 ஆயிரம் பேர் இதுவரை பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுள்ளதாகவும் தமிழக அரசின் நலவாழ்வுத்துறை தெரிவித்துள்ளது. ஆனால் எதிர்க்கட்சிகள், 'இதுவரை தினமும் பத்துப் பேர் வீதம் டெங்கு காய்ச்சலால் இறப்பதாகவும், இதுவரை நானூறுக்கும் மேற்பட்டவர்கள் டெங்குவால் பாதிக்கப்பட்டு இறந்திருப்பதாகவும், ஆதாரப்பூர்வமாகத் தகவல் வந்திருக்கிறது எனக் கூறுவதாக, இத்திங்கள் காலையில் வெளியான செய்திகளில் வாசித்தோம். டெங்கு காய்ச்சல் மேலும் பரவாமல் தடுப்பதற்கு அரசின் நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்படவில்லை என்ற குற்றச்சாட்டுகளும் எழுந்துள்ளன. அப்பாவி பொது மக்களின் உடல்நலனில் அதிகாரிகள் எவ்வளவு தூரம் அக்கறை கொண்டுள்ளார்கள் என்பது கேள்விக்குறியே.

சென்னை பெசன்ட்நகர் கடற்கரையில், கடந்த சனிக்கிழமை மாலையில், சென்னை ஈஸ்வரி பொறியியல் கல்லுாரி மாணவர்கள் குழு ஒன்று, கருப்பு சட்டை அணிந்து தெருக்கூத்து ஒன்றை நடத்தியுள்ளனர். 'நுாறு நாள் ஒரு வீட்டில் பூட்டிவைத்து சோத்தைப் போட்டு சோம்பேறியாக்கும் பிக்பாஸ் கதையல்ல எங்கள் கதை. உலக ஊனமுற்றோர் ஒலிம்பிக்கில், தங்கம் வென்ற, ஏழை தங்கவேலு மாரியப்பனின் கதை' என்று, ஒரு பத்து நிமிடத்திற்குள், விறுவிறுப்புடன் நடித்துக்காட்டி அனைவரின் மனதில் பதிய வைத்தனர். காற்றுவாங்க கடற்கரைக்குச் சென்ற கூட்டம், இக்குழுவின் விழிப்புணர்வு தெருக்கூத்தைப் பார்த்து வியந்து பாராட்டியது. தாங்கள் நடத்தும் அறம் அறக்கட்டளை சார்பாக ஏழை குழந்தைகள் படிக்கும் பள்ளிக்கு கழிப்பறை கட்டித்தருவதற்கு, நிதி சேர்ப்பதற்காக இது போன்ற தெருக்கூத்தை நடத்தி வருகிறோம் என்று, இந்த மாணவர்கள் கூறியுள்ளனர்.

சென்னை ஈஸ்வரி பொறியியல் கல்லுாரியின் இம்மாணவர்கள் போன்று, வருங்காலத் தலைமுறைகள், ஏழைகளின் நலவாழ்வில் அக்கறை கொண்டு, பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றன. மனநலமே உடல்நலத்திற்கு முக்கியம் என்பது நமக்குத் தெரியும். மனநலம், உடல்நலம் காக்கும் பாரம்பரிய உணவு வகைகள், உடற்பயிற்சி, தியானம், யோகா போன்றவைகள், இக்காலத்தில், குறிப்பாக வாட்சப் நண்பர்கள் வட்டத்தில் அதிகமாகப் பகிரப்படுகின்றன. இயற்கை உணவுப்பொருள் அங்காடி நடத்தும் சித்தா மருத்துவர் எ.சுவாமிநாதன் அவர்கள் ஒரு நிகழ்வில் இவ்வாறு பேசியிருக்கிறார்

மனதை ஒருங்கிணைக்க உணவுப் பழக்கம் முக்கியம். குறிப்பாக தற்போது பயன்பாட்டில் உள்ள உடல்நலத்தை பாதிக்கும் உணவுகள், காலநிலைக்கு ஒத்துவராத உணவுகள், உடலுக்கு ஒவ்வாத உணவுகளே மக்களின் மனஅழுத்தத்திற்கும், பரவிவரும் பல்வேறு நோய்களுக்கும் முக்கிய காரணமாகின்றன. தற்போது பரவிவரும் நோய்களை வரும்முன் காக்கவும், அந்த நோய்களுக்கு அடிப்படை மருத்துவ உதவிகள் செய்யவும், நமது பாரம்பரிய நடைமுறைகளே மிகவும் சிறந்தவை.

"மனமது செம்மையானால், மந்திரங்கள் தேவையில்லை' என்பார்கள். நம் வாழ்வில் பெரும்பாலான காலம், வேலையில் செலவிடப்படுகின்றது. நம் ஒட்டுமொத்த உடல்நலத்தைத் தீர்மானிப்பதில், நாம் வேலை செய்யும் இடங்களில் நமக்குக் கிடைக்கும் அனுபவமும் ஒன்று. ஓய்வுபெறும்போது எல்லாருமே முழு மனநலத்துடனும், உடல்நலத்துடனும் இருக்கின்றனரா என்பது சந்தேகமே. தொழிலில் போட்டி, பொறாமை, குறிப்பிட்ட நேரத்தில் வேலையைச் செய்து முடிக்கவேண்டும் என்ற நெருக்கடி, படிப்பிற்கேற்ற வேலையின்மை, சரியான தூக்கமின்மை, ஓய்வின்மை, வேலைசெய்யும் இடங்களில் எதிர்மறையான சூழல், இவற்றால் குடிப்பழக்கத்திற்கு உட்படுதல்.. இப்படி பல காரணங்களால், வேலைசெய்யும் இடங்களில் பலருக்கு மனநலம் பாதிக்கப்படுகின்றது. ஒவ்வோர் ஆண்டும் அக்டோபர் 10ம் தேதியன்று, உலக மனநலம் தினம் கடைப்பிடிக்கப்படுகின்றது. பணி இடங்களில் மனநலம் என்ற தலைப்பில், அக்டோபர் 10, இச்செவ்வாயன்று இந்த உலக நாள் கடைப்பிடிக்கப்படுகின்றது. இந்த உலக நாள் பற்றிக் கூறியுள்ள, WHO என்ற உலக நலவாழ்வு நிறுவனம், ‘விவசாயிகள், தொழிலாளர்கள், பணியாளர்கள், அலுவலர்கள் என ஒவ்வொருவரின் மனநலமும், பணியாற்றும் இடத்தில் எந்த அளவுக்கு பாதிக்கப்படுகிறது என்பதையும், அதற்கான காரணிகளையும் ஆராய்ந்து, அவற்றைச் சரிசெய்வதன் மூலம் பணியாளர்களின் மனநலத்தை மேம்படுத்த முடியும். இதன் மூலம் அப்பணியாளர்களின் பணித்திறன் கூடி, ஒட்டுமொத்த சமூகமும், நாடும் முன்னேறும்’என்று சொல்லியுள்ளது.

மனநலம் பாதிக்கப்படுவதற்கு, மனச்சோர்வும், பதட்டநிலையும் பொதுவான காரணங்களாகச் சொல்லப்படுகின்றன. இவையிரண்டும், வேலையின் தரத்தையும், வேலை செய்யும் திறனையும் பாதிக்கின்றன. உலக அளவில், முப்பது கோடிக்கு மேற்பட்ட மக்கள் மனச்சோர்வாலும், 26 கோடிக்கு மேற்பட்டவர்கள் பதட்டநிலை பிரச்சனைகளாலும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த எண்ணிக்கையில் பலர், இவ்விரண்டு பிரச்சனைகளோடும் வாழ்கின்றனர். தூக்க மாத்திரை எடுத்தால்தான் தூக்கம் வரும் என்ற நிலை பலருக்கு. WHO நிறுவனம் அண்மையில் எடுத்த ஆய்வின்படி, மனச்சோர்வு மற்றும், பதட்டநிலை காரணமாக, ஒவ்வோர் ஆண்டும் உலகப் பொருளாதாரத்தில் நூறாயிரம் கோடி இழப்பு ஏற்படுவதாகத் தெரிகிறது. எனவே வேலைசெய்யும் இடங்களில் மனநலத்தின் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வு அவசியம் என்று ஐ.நா. கூறுகிறது. இந்தியாவில் நான்கில் ஒருவருக்கு மனநலப் பிரச்சனை உள்ளது என்று WHO நிறுவனம் நடத்திய ஆய்வில் கூறப்பட்டுள்ளது.

வாரத்தில் ஐம்பது மணி நேரத்திற்கு மேல் உழைத்தால், மனநலம், உடல்நலம் பாதிக்கப்படும். நம் உடல் நலத்திற்கும், வேலை செய்வதற்கும், மன நலத்திற்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது. ஓய்வின்றி உழைப்பதால் மனத்தடுமாற்றம் ஏற்படுகின்றது. எந்த வேலைக்கும் தகுதியில்லாதவர்கள் எனச் சொல்லி விடுவார்களோ என்ற பயத்தாலும், கூடுதல் வருவாய் கிடைப்பதற்காகவும் சிலர் அதிகநேரம் வேலை செய்கின்றனர். ஆனால் நாளடைவில் இதனால் ஏற்படும் பாதிப்பை பலர் உணர்வதில்லை என, அமெரிக்க ஆய்வாளர்கள் கூறுகின்றனர். மன அழுத்தத்தினால், தற்கொலை செய்துகொள்வோரின் எண்ணிக்கையும் உலகில் அதிகரித்து வருகிறது. இன்று உலகளாவிய பிரச்சனைகளில் ஒன்றாக இருப்பதும் தற்கொலை. கொலைகளைக் காட்டிலும் மூன்று மடங்கு தற்கொலைகள் அதிகமாகியுள்ளன. மேலும், தனிமையுணர்வை ஏற்படுத்தும் டிஜிட்டல் போதைக்கு அடிமையாகிவிடாமல் நம்மைக் காப்போம்.  ஆன்மீகவாதி ஒருவர் இவ்வாறு சொல்கிறார்...

நீ புறக்கணிக்கப்பட்டுவிட்டதாக ஏன் கதறுகிறாய்? இந்தப் பிரபஞ்சம் எப்போதும் உன்னைத் தன் அன்பால், கருணையால் அரவணைத்துக் கொண்டுள்ளது. உண்மையில் புறக்கணிப்பு என்பது மனதின் வேலை. எத்தனையோ மனிதர்கள் உன்னைப் புறக்கணிப்பதுண்டு. நீயும் எத்தனையோ மனிதர்களைப் புறக்கணிப்பதுண்டு. எல்லாப் புறக்கணிப்புகளும் உனக்கு வலியைத் தருவதில்லை. சில மனிதர்களை மனம் கூழாங்கற்களாக நினைக்கிறது. சில மனிதர்களை மனம் விலையுயர்ந்த வைரம் போல் மிக உயர்வாக நினைக்கிறது. அவர்களின் அன்பிற்கும், அங்கீகாரத்திற்குமாய் ஏங்குகிறது. கூழாங்கற்களின் புறக்கணிப்பு வலியைத் தருவதில்லை, வைரத்தின் புறக்கணிப்பு வலியைத் தருகிறது. இது மனதின் "உயர்வு-தாழ்வு மனப்பான்மை" என்ற குணத்தினால் விளைவது. அந்த மனப்பான்மையினால் பிறரை உயர்வாகக் கருதும்போது உன்னை நீயே தாழ்வாகக் கருதுகிறாய். பிறரைத் தாழ்வாகக் கருதும்போது உன்னை நீயே உயர்வாகக் கருதிக்கொள்கிறாய். உன்னை நீ தாழ்வாகக் கருதும் தருணத்தில் வரும் புறக்கணிப்பு வலியைத் தருகிறது. உன்னை உயர்வாகக் கருதும் தருணத்தில் வரும் புறக்கணிப்பை வலியில்லாமல் உன்னால் கடந்து செல்ல முடிகிறது. இவையனைத்தும் உன் மனதின் கற்பனையான நிலைப்பாடுகளேயன்றி உண்மையில் இயற்கையில் அத்தகைய உயர்வு-தாழ்வு ஏதுமில்லை. தியானம் செய். இயற்கையை நேசி. வலிகள் மறையும். பாராட்டுக்காக ஏங்கும் நேரத்தில் நீ எத்தனை பேரை பாராட்ட மறந்திருக்கிறாய் என்று எண்ணிப்பார். இயல்பாய் கடமையைச் செய்யும் இயற்கை போல், நீயும் இயல்பாய் கடமையைச் செய். உன் மனம் மாறினால் எல்லாம் மாறும்.

துணிந்துவிட்டால் தலையில் எந்தச் சுமையும் தாங்கலாம். தெரிந்துகொண்டால் தெளிவு சுலபம். எல்லாவற்றுக்கும் மேலாக இறைநம்பிக்கை அவசியம். இறைவன் சொல்கிறார்- உன் கவலைகளையெல்லாம் என்னிடம் ஒப்படைத்துவிடு, நான் பார்த்துக்கொள்கிறேன் என்று. திருத்தந்தை பிரான்சிஸ் சொல்கிறார் - நாம் நம் செயல்களால் இறைவனை ஏமாற்றம் அடையச் செய்திருந்தாலும், இறைவன் வார்த்தை மாறாதவர், பழிவாங்காதவர் என்று.  

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.