2017-10-11 16:28:00

திருத்தந்தையின் டுவிட்டரைப் பின்செல்பவர்கள் நான்கு கோடி


அக்.11,2017. இன்று நாம் நினைவுகூரும் புனித திருத்தந்தை 23ம் ஜான் அவர்கள் போன்று, இறைவனின் நன்மைத்தனத்திற்கும், அவரின் இரக்கத்திற்கும், திருஅவையிலும் உலகிலும் சான்று பகர்வோம் என்பது, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் டுவிட்டரில் இப்புதனன்று வெளியானது.

புனித திருத்தந்தை 23ம் ஜான் அவர்களின் திருவிழாவாகிய, அக்டோபர் 11, இப்புதனன்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன் டுவிட்டரில் அத்திருத்தந்தையின் சான்று பகரும் வாழ்வை நினைவுகூர்ந்துள்ளார்.

மேலும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் டுவிட்டரைப் பின்செல்லுவோரின் எண்ணிக்கை, இன்றைய தேதிக்கு, நான்கு கோடியைத் தாண்டியுள்ளதாகவும், @Franciscus என்ற திருத்தந்தையின் இன்ஸ்டகிராம் செயலியைப் பார்ப்பவர்களின் எண்ணிக்கை ஐம்பது இலட்சத்தை எட்டியுள்ளதாகவும், திருப்பீட சமூகத்தொடர்பு செயலகம் அறிவித்துள்ளது.

முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்கள் 2012ம் ஆண்டு டிசம்பர் 12ம் தேதி, @Pontifex என்ற முகவரியில் டுவிட்டர் பக்கத்தை ஆரம்பித்து வைத்தார். தற்போது அதில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் செய்தி, ஒவ்வொரு நாளும் ஒன்பது மொழிகளில் வெளியாகி வருகின்றது.

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் டுவிட்டர் பற்றி, வத்திக்கான் வானொலிக்குப் பேட்டியளித்த, திருப்பீட சமூகத்தொடர்பு செயலகத்தின் தலைவர் பேரருள்திரு Dario Edoardo Viganò அவர்கள், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தனக்கு முந்தைய திருத்தந்தையர் போன்று, டிஜிட்டல் கண்டத்தில், சிறப்பாக, ஊடகத்துறை வழியாக, கிறிஸ்தவத்திற்குச் சான்று பகரும் ஆவலைக் கொண்டிருக்கிறார் என்று கூறினார்.

நான்கு கோடி பின்செல்பவர்கள் என்பது, நான்கு கோடி மக்கள், நான்கு கோடி இதயங்கள், மனங்கள் மற்றும், ஆர்வங்கள் எனவும் கூறிய பேரருள்திரு Viganò அவர்கள், திருத்தந்தையின் அதிகாரப்பூர்வப் போதனைகளை, ஒவ்வொரு நாளும் தொடர்ந்து இத்தனை பேர் பின்பற்றுகிறார்கள் என்பதையே இவ்வெண்ணிக்கை காட்டுகின்றது என்றும் தெரிவித்தார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.